|
||||||||
இரண்டாம் திருமுறை-73 |
||||||||
2.073.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2256 விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற்சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரம்வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
கொச்சைகழு மலமென்றின்ன
விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
பகையெறிவித் திறைவனூரே.
2.073. 1
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2257 திருவளருங் கழுமலமே கொச்சை
தேவேந்திரனூர் அயனூர்தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
காழிதகு சண்பையொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுர முயர்ந்ததேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
கண்டத்தோன் விரும்புமூரே.
2.073. 2
பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.
2258 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன்வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற்
காழியிறை கொச்சையம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
தரனாளும் அமருமூரே.
2.073.3
சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2259 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம்வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
கொச்சைதேவேந் திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
சிலம்பனூர் காழிசண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர் பரவுமூரே.
2.073.4
பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2260 தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
வயங்கொச்சை தயங்குபூமேல்
விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங் கோனூர்வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச்
செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர்
உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ
முலகத்தி லுயர்ந்தவூரே.
2.073.5
உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.
2261 புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழிசண்பை
எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற்
கொச்சைவா னவர்தங்கோனூர்
அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை
யுதைத்துகந்த வப்பனூரே.
2.073. 6
வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2262 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலியிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு
சண்பைவியன் காழிகொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
தோணிபுரம் பூந்தராய்சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலுமூரே.
2.073. 7
வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2263 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
சிலம்பனூர் காழிமூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரங் கமலநீடு
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரங்கூடப்போர்
தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள்
செற்றமலைச் சிலையனூரே.
2.073.8
போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2264 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன்றன்னூர்
நிரக்கவரு புனற்புறவ நின்றதவத்
தயனூர்சீர்த் தேவர்கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழிகொச்சை
அரக்கன்விற லழித்தருளி கழுமலமந்
தணர்வேத மறாதவூரே.
2.073.9
அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவு படாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2265 மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
கொச்சையிந் திரனூர்மெய்மை
நூலோது மயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூநீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
சிலம்பனூர் செருச்செய்தன்று
மாலோடு மயனறியான் வண்காழி
சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே.
2.073.10
உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப் பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2266 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன்பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரமொண் புறவநண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
புகலிவெங் குருவுமென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
வகைநின்றான் றங்குமூரே.
2.073.11
சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2267 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுர மணிநீர்ப்பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பைதொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
வேணுபுர மயனூர்மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.
2.073.12
புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.073.திருப்பிரமபுரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|