|
||||||||
இரண்டாம் திருமுறை-74 |
||||||||
2.074.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2268 பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம்
பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
கழுமலநாங் கருதுமூரே.
2.074. 1
நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும்.
2269 கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த்
தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
முடியண்ணல் தங்குமூரே.
2.074. 2
சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும்.
2270 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப்
புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை தரித்தோனூரே.
2.074. 3
கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2271 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
னூருலகில் விளங்குமூரே.
2.074. 4
உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.
2272 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா
மன்னுடலங் காய்ந்தோனூரே.
2.074. 5
காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2273 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ
ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம்
பகைகெடுத்தோன் றிகழுமூரே.
2.074. 6
முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது 130. ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2274 திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள்
பணிந்துலகி னின்றவூரே.
2.074. 7
கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2275 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி
சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்
தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க
டாங்காக்க மிக்கவூரே.
2.074. 8
பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2276 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி
வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ
டழித்துகந்த வெம்மானூரே.
2.074. 9
வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.
2277 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியவெம் மிறைவனூரே.
2.074. 10
மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2278 இறைவனமர் சண்பையெழிற் புறவமய
னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
பரிசறியா வம்மானூரே.
2.074. 11
ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2279 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர்
வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன்
றமிழ்கற்போர் தக்கோர்தாமே.
2.074. 12
அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர்.
திருச்சிற்றம்பலம்
2.074.திருப்பிரமபுரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|