|
||||||||
முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன் |
||||||||
மிக உயர்ந்த கல்வியாளர். பண்பாளர்.
முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன், வயது 87, தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்களில் ஒருவர். கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர், தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர், அமெரிக்க இந்தியத் தூதரகத்தின் அறிவியல் ஆலோசகர், ஐ.நா. மூலம் பல நாடுகளில் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் பங்காற்றியவர், 62 வயதில் மீண்டும் தமிழகம் வந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்பு, தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் துணைத்தலைவர் பதவி, தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலமைச்சரின் ஆலோசகர், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் உயர்கல்விக்குழு தொடர்பான அரசுக்குழுக்களுக்கு வழிகாட்டி, மத்திய அரசின் பல்வேறு உயர்கல்விக் கொள்கைகள் வகுப்பதில் பெரும்பங்களிப்பு,தமிழ்க்கணினியை உலக அளவில் வளர்த்தெடுக்கும் 20 ஆண்டுகால தொடர் பணிகள், கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்புகளின் புரவலர், தற்போது மூன்றாம் முறையாக தொடர்ந்து பதவி வகிக்கும் ஐ.ஐ.டி. கான்பூர் நிறுவனத்தின் தலைவர் ‘பத்மஸ்ரீ’ பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 60 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப்பணியால் இந்தியாவின் உயர்கல்வித்துறை மிகப்பெரிய அளவில் பயன்பெற்றுள்ளது.
அனைவராலும் மதிக்கப்படுகிற ஒரு பேராசிரியர். அவருடைய கல்விப்பணியின் சிறப்புபற்றி எழுதத் தொடங்கினால் , ஆயிரக்கணக்கான பக்கங்கள் தேவைப்படும்.
எனக்கு அவருடன் ஏற்பட்ட தொடர்பைமட்டுமே இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 1998-99 -இல் அவர் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றியபோது, அவருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதன் அலுவலகம் நான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தின் அருகில் இருந்த காரணத்தால், நாள்தோறும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 1999-இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்குப்பிறகு... எனக்குத் தமிழ்க் கணினி மொழியியல் ஆய்வில் ஈடுபட முழுமையாக ஊக்கப்படுத்தினார்.
அந்த மாநாட்டுக்குப்பிறகு... நாங்கள் தயாரித்த தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளை அன்றைய முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களைக்கொண்டு, தலைமைச் செயலகத்தில் வெளியிட உதவினார். அன்று மாலையிலேயே மறைந்த மாண்புமிகு முரசொலி மாறன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி அளித்தார். அந்த மென்பொருளுக்குக் ''கலைஞர் 99'' என்ற பெயரை பேராசிரியர்தான் வைத்தார்.
அதன்பின் அவர் கலந்துகொள்ளும் கணினித்தமிழ் தொடர்பான அனைத்துக் கூட்டங்களுக்கும் அழைத்துச்செல்வார். அதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினிமொழியியல் தொடர்பான பல மாநாடுகளை - 2000 முதல் 2010 வரை - நாங்கள் நடத்தியபோது, அத்தனை மாநாடுகளுக்கும் அவரே தலைமை ஏற்று, சிறப்பு செய்தார். கணினித் தமிழ் தந்தை என்றுதான் நான் அவரைக் குறிப்பிடுவேன்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் நிறுவப்படவும், அதன்வழியே தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்குத் துணைபுரிவதற்கு ஒரு கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்படவும் அவர் முயற்சியே காரணம்! உத்தமம் என்ற பெயரில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக ஒரு பொதுக் கழகம் உருவாகவும் இவரே காரணம்!
பேராசிரியர் பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட அவரே முக்கியக் காரணம். அதன்பிறகும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பல கருத்துரைகளை அவர் பேராசிரியர் பொற்கோ அவர்களுக்கு அளித்தார்.
2010-இல் கோவையில் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ் இணைய மாநாடும் சிறப்புற நடைபெற முன்முயற்சி மேற்கொண்டார். அதையொட்டி, தமிழகத்தில் கணினித்தமிழுக்கு என்று ஒரு தனி உயராய்வு மையம் நிறுவுவதற்கு ரூபாய் 50 கோடியில் ஒரு திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார். நானும் அதைத் தயாரித்து அளித்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
அவருடன் பணிசெய்யும்போது நான் கற்றுக் கொண்டது... எதையும் மிகத் தெளிவாகத் திட்டமிடவேண்டும் - ஒவ்வொரு கூட்டத்தின் இறுதியிலும் தெளிவான முடிவு எடுக்கவேண்டும் - அம்முடிவுகளை வெறும் அறிக்கைகளாக இல்லாமல், அதன் இறுதி வெற்றிவரை பணிசெய்யவேண்டும்.
தனிப்பட்டமுறையிலும் என்மீது மிகுந்த அன்புகொண்டவர். அவருடைய இழப்பு தமிழ் உலகிற்கும், குறிப்பாகக் கணினித்தமிழுக்கும், ஈடு செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
( A proposal for the establishment of two Centres for the Development of Computational Linguistics (CDCL) in Tamil will be prepared soon, said M. Anandakrishnan, educationist and chairman, Board of Governors, IIT-Kanpur.
Speaking at a conference on Tamil computing organised by the Department of Tamil, University of Madras, in Chennai last week, he said though the government had recognised the need for Tamil computing more than ten years ago, not much progress had been made in the field.
He noted that only one professor in one department in one university in Tamil Nadu (N. Deiva Sundaram of University of Madras) was working in a field which needed inputs from many fields including computer science, physics, anatomy, and Tamil linguistics.
Establishing a CDCL would cost only around Rs. 7 crore and the Centre would spur the growth of research in this field by becoming a focal point for inter-disciplinary work, he said. - The Hindu, March 1, 2010)
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|