1
சின்னப் பூக்கள் கோத்தெடுத்துச் …. சீராய் மாலை செய்வதுபோல், அன்னைத் தமிழில் எழுதுதற்கு ….அடிப்படை எழுத்து முப்பதுண்டு! பொன்போல் பன்னிரு உயிரெழுத்து, …. புதுவைரம்போல் மெய்யெழுத்து, பின்னம் ஆகா இவ்வெழுத்தைப் …. பின்னிச் சேர்த்தால் பிறஎழுத்து!
2
அமுதல் ஔவரை பன்னிரண்டு …. அழகுள எழுத்துகள் உயிராகும், கமுதல் னவரை பதினெட்டு …. கவின்மிகு எழுத்துகள் உடலாகும்!
3
உயிரெழுத் துக்குள் இருவகைகள், …. உரைக்கும் விதத்தில் மாறுபடும், குயிலினைப்போலே மெல்லியதாம் …. குறிலெனும் ஐந்து நல்லெழுத்து! வயிரம் போலே மின்னுகிற, …. வலுவுள ஏழு நெடிலெழுத்து! பயிரினை வளர்த்திடத் துணைபுரியும் …. பகலவன் போலே இவ்வெழுத்து!
4
மெய்யெழுத் துக்குள் மூவகைகள், …. மெல்லினம், வல்லினம், இடையினமாம், பெய்மழை போலே தமிழ்ச்செடியைப் ….பேணி வளர்க்கும் இவ்வெழுத்து!
5
நெஞ்சினில் பிறப்பது வல்லினமாம் …. நேர்த்தியில் அதற்கிணை வேறிலையாம், பஞ்சினைப் போலே மூக்கினிலே …. படர்ந்து மலர்வது மெல்லினமாம் கொஞ்சிடும் இடையினம் இவைநடுவே …. கொவ்வைப் பழம்போல் இனித்திடுமாம்! மிஞ்சிட வேறு மொழியேது, …. மிளிர்ந்திடும் எங்கள் தமிழ்மொழியை!
|