தங்கள் அடையாளத்தை தக்க வைக்கத் திண்டாடும் மயன்மார் தமிழர்கள். உலகத் தமிழர்களின் கவனத்திற்கு !!
மயன்மார் எனும் பர்மா நாட்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் குடியேறிய தமிழர்கள் அங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வந்தாலும் , பர்மாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழர்களின் நிலங்கள் பர்மா அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதனால் பல லட்சம் பர்மா தமிழர்கள் நாட்டை விட்டு தமிழகம் திரும்பிய வரலாறும் உண்டு. அங்கேயே தங்கி விட்ட பர்மா தமிழர்களின் தாய் மொழிக் கல்வி உரிமை பறிக்கப்பட்டு பர்மா மொழி திணிக்கப்பட்டது. தமிழ் வழிப் பள்ளிக் கூடங்கள் பர்மா அரசால் மூடப்பட்டன . இதனால் 1960 க்கு பிறகு பர்மா தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாய் மொழியை மறக்கத் தொடங்கினர் . அவர்களுக்கு தமிழை எழுதவோ , படிக்கவோ , பேசவோ தெரியாமல் போனது . இப்போது அங்குள்ள புதிய தலைமுறை தமிழர்கள் , தாங்கள் ஏன் தமிழ் மொழியை படிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளனர் . தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு , வணிக வாய்ப்பு கிடைக்காத நிலையில் தாங்கள் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றனர் . இது ஒரு நியாயமான கேள்வியாக இருந்தாலும் , தமிழர்களின் அடையாளம் அவர்கள் தாய் மொழி தானே . அதை தக்க வைத்துக் கொண்டால் தானே அவர்கள் தமிழர்களாக தங்களை அடையாளப்படுத்த இயலும் என்று கேட்கின்றனர் தமிழ்ப் பற்றாளர்கள்.
உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியில் எழுதப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு உலகத் தமிழர்களுக்கு என்று ஒரு அரசு வேண்டும் . தமிழர்களுக்கான ஒரு அரசு, நாடு உலகில் இல்லாத காரணத்தால் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருகின்றனர் . இந்தியாவிற்கு ஒரு இந்தி அரசு உள்ளது . அந்த அரசு இந்தி மொழியை உலகில் புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வழங்கி வருகிறது . வளைகுடா நாட்டில் கூட இந்திப் பள்ளிக் கூடங்கள் அமைத்து இந்தியை கற்றுக் கொடுக்கிறது இந்திய அரசு . அதே போல் பர்மா நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இந்தி பாடங்களை கற்றுக் கொடுக்க முன்வருகிறது . ஆனால் பர்மா தமிழர்களுக்கு தமிழ்ப் பாடங்களை கற்றுக் கொடுக்க இந்திய அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை . வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்ப் பாடங்களை வழங்க தமிழக அரசு இனியாவது முயற்சி மேற்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு என்று ஒரு வெளியுறவு துறை உருவாக வேண்டும் . இது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
பர்மா நாட்டில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை தக்க வைக்க பெரு முயற்சி எடுத்து வருகின்றனர் . சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியில் இப்போது தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு வருகிறது . இங்கு தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது . தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வசதி படைத்த தமிழ் வணிகர்கள் சம்பளமும் கொடுக்கின்றனர். தமிழ்க் கோவில்கள் பல அங்கு இருந்தாலும் அனைத்திலும் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளது . தமிழர்களின் பண்பாட்டை காக்கவும் அங்கு பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது.
|