LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 683 - அமைச்சியல்

Next Kural >

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)
மணக்குடவர் உரை:
எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு-வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்-அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம். கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.
கலைஞர் உரை:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வேற்றரசரிடம் தூது சென்று அவர்களுடைய சபையில் விவாதிக்க நேர்ந்தால், அரசியல் நீதி நூல்களிலும் வல்லவனாகப் பேசக்கூடியவனே வெற்றிகரமான தூதனாவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
வேலினையுடைய வேற்றரசனிடம் சென்று தம் அரசனுக்கு வெற்றியைத் தரும் தொழில் சொல்வானுக்கு இலக்கணமாவது, நீதி நூல்களைக் கற்ற அமைச்சருக்குள் தான் அவற்றில் வல்லவனாதல்.
Translation
Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
Explanation
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).
Transliteration
Noolaarul Noolvallan Aakudhal Velaarul Vendri Vinaiyuraippaan Panpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >