மிருகம் பார்க்க ஆசையா?
….மிருகக் காட்சி செல்லலாம்!
கருநி றத்துக் கூண்டிலே
….கரடி, சிங்கம் காணலாம்!
அருமை யாக ஆடுகின்ற
….அழகு மயிலைப் பார்க்கலாம்!
சுருதி யோடு பாடிடும்
….சொர்ணக் குயிலை நோக்கலாம்!
குரங்கு உண்டு இப்புறம்,
….கொல்லும் புலிகள் அப்புறம்,
அரவம் மெல்ல ஊர்ந்திடும்,
….அதிர்ந்து ஓடும் மானினம்,
கரத்தில் நீரைக் குடிக்கிற
….கரிய யானை பிளிறிடும்,
சிரத்தை நீட்டி ஒட்டகச்
….சிவிங்கி யொன்று சிரித்திடும்!
மிருகம், பறவை கண்டவர்
….மிகம கிழ்ச்சி கொள்கிறார்,
இருக்கும் தீனி வீசியே
….’இந்தா, தின்னு’ என்கிறார்,
விருப்பத் தோடு தருவதை
….விலங்கு அள்ளி உண்ணுது,
வருந்திப் பின்னர் நோயிலே
….வாடி தேகம் மெலியுது!
கடையில் கிடைக்கும் வறுவலை,
….கடலை உருண்டை, இனிப்பினைத்
தடையு மின்றி மானிடர்
….தட்டு நிறையத் தின்னலாம்,
வடையும் வாழை பஜ்ஜியும்
….வனத்து வயிறு ஏற்குமா?
கொடைகொ டுத்து விலங்கினைக்
….கொடுமை செய்தல் நியாயமா?
இன்ன மிருகம் தின்னவே
….ஏற்ற உணவு என்னது
என்ற றிந்து ஊழியர்
….ஏழு நாளும் தருகிறார்,
இன்ப ழக்கம் இதுவுமே
….இன்ன லாகும் மாற்றினால்,
உன்க ரத்து உணவினை
….ஊட்ட வேண்டாம், பிழையது!