திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மைக்கருத்து அறநூலார்க்கு மட்டு மன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம்.
இந்நெறிமை ( விதி ) அரசர்க்கு மட்டு மன்றி எல்லாத்தொழிலாளர்க்கும் ஒப்ப வுரியதாயிருத்தலால் , 'உலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு' என்றார் . இங்கு உலகம் என்றது தமிழகத்தை . எப்பால் நூலென்றதும் தமிழிலக்கியத் துறைகளையே . இன்றிறந்துபட்டுள்ள பண்டைத் தமிழிலக்கியத்திற் பெரும்பகுதி திருவள்ளுவர் காலத்தில் இறவாதிருந்தது . வடநூலார்க்குந் துணிவு என்று கூறாமையை நோக்குக.
கலைஞர் உரை:
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும்
கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கடமைகளை மகிழ்ச்சியில் மறந்துவிடுபவர்களுக்குப் புகழால் வரக்கூடிய நன்மைகள் இல்லை. இது உலகத்தில் எந்த நாட்டிலும் அறிவாளிகள் அனைவரும் கண்ட உண்மை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மறதியைக் கொண்டு நடப்பவர்களுக்கு புகழுடைமை இல்லை. இவ்வுண்மை நீதி நூலுடையார்க்கே யன்றி உலகத்தில் எவ்வகைப்பட்ட நூலுடையவர்களுக்கும் ஒப்ப முடிந்த முடிவாகும்.
Translation
'To self-oblivious men no praise'; this rule
Decisive wisdom sums of every school.
Explanation
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.