LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1259 - கற்பியல்

Next Kural >

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)
மணக்குடவர் உரை:
புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) (இ-ரை.) புலப்பல் எனச் சென்றேன்-அவர் வந்தபொழுது . உரையாடாது ஊடவேண்டுமென்று கருதி அவர் முன்நில்லாது வேறோரிடத்திற்குப் போனேன் ; நெஞ்சம் கலத்தல் உறுவதுகண்டு புல்லினேன்-அங்ஙனம் போய்த்தான் என்ன? என் உள்ளம் நிறையில் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலையறிந்து , இனி இவ்வூடல் பயன்படாதென்று அவரைத் தழுவினேன். நிறையழிந்தவர்க்குக் கூடலே யன்றி ஊடலில்லை யென்பதாம்.
கலைஞர் உரை:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலர் வந்துவிட்டால் இந்த வருத்தமும் நிந்தனையும் ஒழிந்துவிடும். முன்னே இப்படி அவர் பிரிந்திருந்து வந்தபோது) அவரிடம் பிணங்கிக்கொள்ள வேண்டுமென்று அவர் முன் போனேன். ஆனால் அவரைக் கண்டவுடன் என் மனம் அவரைப் புணர விருப்பங் கொண்டுவிட்டது. அதைக் கண்டு நான் அவரைத் தழுவிக் கொண்டேன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அவர் வந்தபோது பிணங்கவேண்டும் என்று எண்ணி முன்னே நிற்காமல் பிறிதோர் இடத்திற்குச் சென்றேன். எனது நெஞ்சம் நிறைகுணத்தில் நிற்காமல் அவரோடு கலத்தல் தொடங்குவதையறிந்து புல்லினேன்.
Translation
'I 'll shun his greeting'; saying thus with pride away I went: I held him in my arms, for straight I felt my heart relent.
Explanation
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.
Transliteration
Pulappal Enachchendren Pullinen Nenjam Kalaththal Uruvadhu Kantu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >