மாமியார் ஒருத்தி தன் தோழியிடம் கூறினாளாம் என் மகன் சனியோ...ட சனிதான் எண்ணெய் தேய்ச்சிக்கிறான். என் மருமகள் இருக்காளே தீவுளிக்கு தீவுளி, தீவுளிக்கு தீவுளி எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாள். ( சனிக்கிழமை ஆண்டுக்கு ஒருமுறை வருவது போலும், தீபாவளி வாரா வாரம் வருவது போலும் சொல்வதை கவனிக்கவும்) புலி மார்க் சீயக்காய் எப்போதும் வீட்டில் இருக்கும். வாரா வாரம் சனிக்கிழமை வடக்குவெளிக்கு எங்களை அழைத்துச் சென்று அப்பா எண்ணெய் தேய்த்து விடுவார். அவர் அழுத்தித் தேய்ப்பது எங்களுக்கு எரிச்சலாக இருக்கும். தன் குழந்தைகள் நலமாக இருக்கவேண்டும் என்கிற அன்பின் வெளிப்பாடு அது. பிறகு குழாயில் பீறிட்டு அடிக்கும் நீரில் குளிப்பது அருவியில் குளிப்பது போல் ஆனந்தமாக இருக்கும். அவரோடு அந்த பழக்கம் மறைந்து போனது. நான் ஒருநாளும் என் குழந்தை களுக்கு அப்படி எண்ணெய் தேய்த்து விட்டது இல்லை. இப்போது தீபாவளியன்று மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நிலையில் புலி மார்க் சீயக்காய் பயன்பாடு குறைந்து வந்தாலும் 70 ஆண்டுகளைக் கடந்தும் அந்த நிறுவனம் தனது வணிகத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளிலும் நடத்திவருவது வியப்பளிக்கிறது. ஒரு பழக்கம் மக்களிடம் அருகி வருவதால் அது சார்ந்த வணிகமும் காலத்துக்கேற்ப மாறிவிடுகிறது. சீயக்காய் பொட்டலம் தாளிலிருந்து நெகிழிக்கு மாறியுள்ளது. திருக்குறளும் அதற்கான உரையும் கூட அச்சிடப்பட்டுள்ளது. வலம்புரி ஜான் மேற்கோள், மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம் போன்றவையும் வெளியிடப்பட்டுள்ளது.
சீயக்காயுக்கும் எண்ணெய்க்கும் உள்ள பந்தம் எப்போதும் மாறாதது. கீரனூர் செட்டியார் தனது மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்களை மிதிவண்டியில் வைத்து க்கொண்டு வெளக்கெண்ணெ, தேங்காண்ணெ, நல்லெண்ணேய் என்று கூவிக்கொண்டு தெருவில் நுழைந்ததும் அம்மா, பெரியம்மா, சின்னம்மா, ஆச்சிகள் என எல்லாரும் அவரவருக்குத் தேவையான எண்ணெய்களை வாங்குவர். வயலில் விளையும் எண்ணெய் வித்துகளை செக்கில் ஆட்டி எண்ணெயை குடத்தில் வைத்திருந்ததும் உண்டு. தலையில் சற்று கூடுதலாக எண்ணெய் தடவி வரும் மாணவர்களிடம், "என்னடா எண்ணெய் கொடத்துல தலைய விட்டாயா?" என்று ஆசிரியர் கேட்பார்.
ஹூம்... ஒரு சீயக்காய் இவ்வளவு நினைவுகளைக் கிளறுமா!?
நன்றி:ரத்தின புகழேந்தி..
|