|
||||||||
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 1 |
||||||||
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 1 நோக்கம்: தமிழர்களுக்கே உரியத் தலைசிறந்த மருத்துவமாக ‘சித்த மருத்துவம்’ விளங்குகின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட சித்தர் இலக்கியங்கள் இன்றும் பல்வேறு வித ஆய்வுகளுக்கு உட்பட்டவையாகவே விளங்குகின்றன. தோண்டத் தோண்ட பல சுவாரசியங்களை தன்னகத்தேக் கொண்டவையாகத் திகழ்கின்றன. அப்படிப்பட்ட சித்தர் இலக்கிய ரகசியங்களை உலக மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்னும் நோக்கில் இந்நிகழ்வு அமைகின்றது. தீர்ப்பு வழங்குபவரே திருவள்ளுவர்: திருவள்ளுவர் இயற்றிய ‘திருக்குறள்’ அனைவரும் அறிந்ததே. திருக்குறளை ஆராயும் போது திருவள்ளுவர் தீர்ப்பு வழங்குபவராகச் செயல்பட்டிருப்பதை அறியலாம். இது செய்தால் இது நடக்கும்; இதற்கு இதுதான் பதில்; என்று கூறியிருப்பாரேத் தவிர இது செய்தால் இது நடக்கலாம் என்ற ஊகமான கருத்துக்களுக்குத் திருக்குறளில் இடமில்லை. “அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்” பின்னால் நிகழப்போவதை முன்னாலே அறிபவர் அறிவுடையவர் ஆவார். அவ்வாறு அறிய இயலாதவர் அறிவில்லாதவர் ஆவார். இவ்வாறு வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என மொழிபவர் திருவள்ளுவர். இதனால் தான் திருவள்ளுவரை ‘தீர்ப்பாளர்’ என்று கூறுகிறோம். திருவள்ளுவர், “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலாய் எண்ணிய மூன்று” என்கிறார். அதாவது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் உடலில் சீரான நிலையில் இருக்க வேண்டும். இது மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் உண்டாகும். உலகின் எந்த மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும், எந்த மனித உடலுக்கும் இது தான் அடிப்படை. இதனை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அறிந்து கூறியிருக்கின்றார். திருவள்ளுவரின் ‘ஞான வெட்டியான்’: திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ நூலை அறியாத மக்கள் இல்லை என்று கூறலாம். ஆனால் திருவள்ளுவர் இயற்றிய ‘ஞான வெட்டியான்’ என்னும் நூல் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூலாக ‘ஞான வெட்டியான்’ என்னும் நூல் விளங்குகின்றது. உலகெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு முன்னால், ஊகிப்பதற்கு முன்னால், அறிவியல், மருத்துவம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால் ஞானத்தினாலே அறிந்தபல செய்திகளைத் திருவள்ளுவர் இந்நூலில் கூறியிருக்கின்றார். திருமூலரின் திருமந்திரம்: “முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எங்கனே” என்கிறது திருமந்திரம். அதாவது முகத்தில் இருக்கின்ற கண்களைக் கொண்டு பார்ப்பதை விட, அகத்தில் இருக்கும் கண்களைக் கொண்டு பார்ப்பதே சிறந்தது. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்கிறது திருமந்திரம். அதாவது உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து கொண்டேன். எனவே உடம்பை வளர்த்தேன். அதனால் உயிரையும் வளர்த்துக் கொண்டேன் என்பதாகும். முடிவுரை: உலக அறிவுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கொண்டவர்களாக விளங்கியவர்கள் சித்தர்கள். அவர்களின் ஒவ்வொரு பாடலும் ஆழமான பொருளுடையவை. சித்தர் இலக்கியங்களை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் என்று எவரும் இலர். இன்று வரை அவற்றை அறிந்து கொள்ள முற்படுபவர்களாகவே அனைவரும் விளங்குகின்றனர். அவ்வகையில் சித்தர் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.
|
||||||||
by Lakshmi G on 10 Oct 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|