|
|||||
மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார் |
|||||
மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார் பிறப்பும், படிப்பும்: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ல் பிறந்தவர் தொ. பரமசிவன் அவர்கள். தமிழ் மொழியில் பண்பாட்டு ஆய்வாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மதுரை பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைத்தமிழ் படித்தவர். சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தவர். முனைவர் பட்ட ஆய்வு: 1976ல் மதுரை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார். மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள அழகர் கோவிலை தன் ஆய்வுப்பொருளாக திரு. தொ. பரமசிவன் அவர்கள் எடுத்துக் கொண்டார். அந்த கோயில் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வானது, ஆய்வு நூல்களுக்கென வரையறுக்கப்பட்ட விதிகளை மாற்றியமைத்தது. பொதுவான ஆய்வுகளைப் போலக் கோவிலின் தல புராணத்தை விவரிக்காமல் அழகர் கோவிலுக்கும் பல்வேறு சாதியினருக்குமான உறவைத் தனது ஆய்வாக தொ. பரமசிவன் அவர்கள் முன்னெடுத்தார். இந்த ஆய்வு பலரால் பாராட்டப்பட்டதையடுத்து மதுரை காமராசர் பல்கலைக்கழகமே அதனைப் புத்தகமாக வெளியிட்டது. அறியப்படாத தமிழகம்: திராவிட இயக்கச் சார்பும், தமிழ் மொழியின் மீது தீராத பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தும், தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காகச் சமஸ்கிருதமும் பயின்றார். அழகர் கோவில் நூலுக்குப் பிறகு வெளிவந்த அவருடைய்அறியப்படாத தமிழகம்’ என்ற நூல் அவரை தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் அறியப்பட்டதாய் ஆக்கியது. சின்னசின்ன கட்டுரைகளில் கூட இதுவரை நாம் அறிந்திராத தகவல்களுடன் நாம் பார்த்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனை வீச்சைத் தமிழகம் கண்டது. நாட்டார் வழக்காறுகள், பெருந்தெய்வங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், சாதி, போன்றவை குறித்து தொ. பரமசிவன் அவர்களுடைய பார்வை வேறுபட்டதாய் காணப்பட்டது. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றிய அவர் பிறகு, திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையின் தலைவராகத் திகழ்ந்தார். பிறகு விருப்பு ஓய்வு பெற்றார். இயற்றிய நூல்கள்: தெய்வங்களும், சமூக மரபுகளும், பண்பாட்டு அசைவுகள், இதுவே ஜனநாயகம், பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு, சமயம் ஓர் உரையாடல் போன்றவை இவர் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்க நூல்களாகும். சிறப்புகள்: பணத்துக்கும், புகழுக்கும் ஒருபோதும் மயங்காத, எதற்காகவும் தன் கருத்துக்களில் சமரசம் செய்து கொள்ளாத மிகப்பெரும் தமிழறிஞராக இறுதிவரை எளிய வாழ்வையே வாழ்ந்தவர் திரு. தொ.. பரமசிவன் அவர்கள். அவரோடு உரையாடும் சில மணித்துளிகளில் அறிவின் விசாலமும் அவரது நினைவாற்றலும் வியப்பளிப்பவை. நூல்களில் கற்றவற்றைத் தமிழ் நிலப்பரப்பில் வீதிகளில் நின்று ‘இதோ பாருங்கள், இதுதான் சங்க இலக்கியம் சொன்ன சேதி’ என்று ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தவர். தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழ் வைணவம், தமிழ்ச்சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டது என்பதைக் கண்:டு கொள்ளலாம். மறைந்தார்… ‘தொ.ப.’ என்று மாணவர்களாலும், வாசகர்களாலும் அன்போடு அழைக்கப்படும் திரு. தொ. பரமசிவன் அவர்கள் கடந்த டிசம்பர் 24 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் பாளையங்கோட்டை யாதவர் வீதியில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் அஞ்சலி: அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் கோணங்கி, பூ உலகின் நண்பர் சுந்தர் ராஜ், கவிஞர் முத்துகிருஷ்ணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். பெரியாரியவாதி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர், ‘மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த சிந்தனையாளருமான அய்யா தொ. பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உறுதிமிக்க பெரியாரியவாதியான அவர் தற்செயலாகப் பெரியாரின் நினைவுநானிலேயே காலமாகியிருக்கிறார்’ என்று இரங்கல் தெரிவித்தனர். தமிழகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தது மறையாத சோகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
|
|||||
by on 26 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|