|
|||||
பன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு |
|||||
எழுமின் மூன்றாவது உலகத் தமிழ் தொழில்முனைவோர் , திறனாளர்கள் மாநாடு நவம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்களுக்கு மிகச்சிறப்பாக நடந்துவருகிறது. வியாழன் அன்று தொடங்கிய இம்மாநாடு பல்வேறு நாடுகளிலிருந்து பல தொழில் சார்ந்த ஆளுமைகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. முதல்நாள் மாநாடு மேள-நாதஸ்வரம் இசைக்க, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் , அரங்க வளாகம் முழுக்க தமிழ் கலாச்சாரத்தை போற்றும் கண்கவர் வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் எழுமின் அமைப்பின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகத் கஸ்பார் அவர்கள் கிறித்தவ மகளிர் கல்லூரி முனைவர்.லிலியன் ஜாஸ்பர் அவர்களை அறிமுகப்படுத்தி வரவேற்புரை நிகழ்த்த அழைத்தார், கல்லூரி முதல்வர் அவர்கள் வரவேற்புரை க்குப் பிறகு, ஹரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலர் , ஓய்வுபெற்ற திரு.தேவசகாயம் இ ஆ ப அவர்கள் உரையாற்றினார், அடுத்து பேச வந்த ஒரிசா மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஆர்.பாலகிருஷ்ணன் இ ஆ ப அவர்கள் "சிந்துவெளி முதல் கீழடிவரை, துணைக்கடப் பெருவெளியில் காலம் வளர்த்த வணிகத் தமிழ் " என்ற தலைப்பில் மிகச்சிறப்பானதோர் கருத்தியல் உரையை வழங்கினார். அடுத்து பேசிய ஆற்காடு நவாப் அரச பரம்பரையை சார்ந்த முனைவர்.முகமது ஆசிப் அலி அவர்கள் தமிழின் பெருமையையும், மத நம்பிக்கைகளைத்தாண்டி தமிழால் ஒன்றிணைவது குறித்து பேசினார். ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து உரையாற்றிய சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள், தமிழ் வணிக சமூகம் தமிழரின் மருத்துவ அறிவியலை வளர்த்தெடுக்க முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டு , அதில் உள்ள வாய்ப்புகள் குறித்து மிகத்தெளிவாக பேசினார். அவரது உரையில் தமிழகம் தழுவிய அளவில் மருத்துவம் எப்படி தமிழர்களுக்கும், இந்த உலக மாந்தர்களுக்கு பயன்படும் என்று சிறப்பாக பேசினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் சக்திவேல் உரையாற்றினார். காலை இணையமர்வுகளுக்கு முன்பு இறுதி உரையாற்றிய அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் எழுமின் குடும்பமாக நாம் ஒருவரை ஒருவர் எப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு தொழிலில் முன்னேருவது, வேலை செய்யும் தமிழ்ச்சமூகம் , வேலை கொடுக்கும் சமூகமாக மாறுவது எவ்வளவு அவசியம் என்றும் அதற்கு எழுமின் எப்படி திட்டமிடுகிறது என்பது குறித்தும் குறிப்பிட்டு பேசினார். காலை இணையமர்வுகளாக , திரு.மோகன் குமாரமங்கலம் அவர்கள் தலைமையில் முதலீடு குறித்த தலைப்பும், மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் தலைமையில் சித்த -ஆயுர்வேதத்தை எப்படி உலகளாவிய அளவில் முதலீடு செய்து கொண்டுசெல்வது என்ற தலைப்பில் ஒரு இணையமர்வும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் உற்பத்தி என்பதை திரு.கிருஷ்ணன் கோபிநாத் அவர்கள் தலைமையில் ஒரு அமரவும் நடைபெற்றது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வாய்ப்புகள் குறித்த இணையமர்வு திரு.ஆல்பிர்ட் பெர்ச்மென் தலைமையிலும், 21வது நூற்றாண்டு கல்வியும், வேலைவாய்ப்பும் என்ற தலைப்பில் முனைவர்.லிலியன் ஜாஸ்பர் அவர்கள் தலைமையிலும் , மாணவர்களின் தகுதியை வளர்க்கும் வாய்ப்புகள் குறித்த அமர்வை முனைவர் ராஜன் பாபு , அதிக மன அழுத்தம் உள்ள மேற்கல்வியிலிருந்து மாணவர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்துவது குறித்து கல்வியாளர்களின் கருத்துரையாடலும் நடந்தது. மேலும் மதிய உணவுக்குப்பிறகு பல்வேறு தலைப்புகளில் மூன்று வெவ்வேறு அரங்குகளில் பல பயனுள்ள தலைப்புகளில் இணையமர்வுகள் நடந்தன. மாலையில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தமிழ்நாடு அரசின் பல தொழில் உதவிகள் , திட்டங்கள் குறித்து மிகச்சிறப்பாக உரையாற்றினார். எழுமின் சேவையை பாராட்டிப்பேசிய அமைச்சர், உரிய உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று உறுதியளித்தார். மாணவிகளின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளுடன் , பல்வேறு சுவர்களுடன் கூடிய உணவுடன் முதல்நாள் நிகழ்வு இனிதே நடந்தது.. நிகழ்ச்சியின் நேரலைகளை www.fb.com/ValaiTamil லும் , பதிவு செய்யப்பட்ட முழு காணொளிகளை www.YouTube.Com/ValaiTamilTV -லும் பகிரப்படுகிறது. அரங்கத்திற்கு வெளியில் பல்வேறு தமிழ் தொழில்கள் தங்கள் கடைகளை அமைத்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்க வளாகத்திலிருந்து வலைத்தமிழ் நிருபர் : அ .சுரேஷ் |
|||||
by Swathi on 15 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|