இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க முடிவானது. அதன்படி 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிந்து தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களை ஒன்றாக்கி, ஒருமைப்பட்ட தமிழ்நாடு என்னும் தனி மாநிலமாக உருவான இந்த நாளை தமிழ்நாட்டு பிறந்த நாள் என்று அரசு கொண்டாடி வருகிறது.
நமது நாட்டை நம்மிடம் விட்டுவிட்டு ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றைய சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 420. இவர்கள் பிரிந்துப் போன பிறகு தற்போதையச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234.
தமிழகம் உருவான தினத்தைக் கொண்டாட தமிழறிஞர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நடப்பு ஆண்டு முதல் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாட்டு நாளாக் கொண்டாட தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் தமிழ் தொன்மை குறித்துச் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியின் புகைப்படங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இதேபோல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழகம் உருவான வரலாறு தொடர்பானக் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மற்ற மாநில அரசுகள் இந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இந்த நாளைத் தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் உத்சவ திருவிழா போன்று கொண்டாடி மகிழ்கின்றார்கள். கர்நாடகாவில் ஒரு மாதம் வரைக் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் கன்னட கொடி ஏற்றி, கன்னட தாய்க்கு மரியாதை செலுத்தி, கன்னட தேசிய எழுச்சித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர் கன்னடர்கள். அதேபோல் தெலுங்கிலும் கொண்டாடுகின்றனர். சுமார் 1,35,000 சதுர கிலோமீட்டர் பகுதியை ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவும் பிடித்துக்கொண்டன. நம்முடைய தமிழ் நாட்டை பேணி பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தின் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை மற்றும் மொழி உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் விதமாகத் தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடி ஏற்றிய தமிழ்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடுவோம்.
தென் இந்தியாவின் முக்கியப் பகுதியே சென்னை மாகாணம் தான். தமிழர்கள் அனைவரும் ஒரே ஆட்சியின் கீழ், தமிழ்நாடு என்ற அரசின் கீழ், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் கீழ், தமிழ்நாடு என்ற அடையாளத்தின் கீழ் வந்த தினம் நவம்பர் 1ம் நாள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும் அதனால் தமிழரின் அடையாளத்தை நவம்பர் 1-ஆம் தேதியில் தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்.
|