|
||||||||
தூக்கத்தில் நடப்பவை - சேயோன் யாழ்வேந்தன் |
||||||||
தூக்கத்தில்
கனவுகள் நிகழ்கின்றன
கனவுகள் பெரும்பாலும்
நினைவிலிருப்பதில்லை
தூங்குவதுபோல் கனவு கண்டு
விழிப்பவர்களுக்கு
தூக்கமே கனவாகப் போய்விடுகிறது
தூக்கத்தில்
மரணங்கள் நிகழ்கின்றன
தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று
செத்தவனைத் தவிர்த்து
எல்லோரும் சொல்லுவார்கள்
தூக்கத்தில்
விபத்துகள் நிகழ்கின்றன
இறந்து போன பயணிகளும்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக
யூகங்களினடிப்படையில்
ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சாவதற்கு சற்றுமுன்
அவர்கள் விழித்திருப்பதற்கு
சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.
தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில்
பெண்களின் தூக்கத்தில்
அதிகார்ப்பூர்வ கணவர்களால்
நிகழ்த்தப்படும் விபத்துகள்
சேர்க்கப்படக் கூடாதென
உச்ச நீதிமன்றமே
தீர்ப்பளித்திருக்கிறது
தூக்கத்தில் கொலைகள் நிகழ்கின்றன
மதுபோதையிலோ
புணர்ச்சிக்குப் பிந்தைய அயர்ச்சியிலோ
உறங்கும் கணவனின் தலையில்
குழவிக்கல்லையோ (கிராமப் பெண்டிர்)
கிரைண்டர் கல்லையோ (நகரப் பெண்டிர்)
போட்டுக்கொல்வது பெரும்பான்மையாக உள்ளது
அப்படியொரு கொலையைச் செய்து
ஜெயிலுக்குப் போய்வந்த பழனியம்மாள்
75 வயதிலும் நலமாக இருக்கிறாள்
தாங்கள் தூக்கத்தில் நடப்பதையோ
தங்கள் தூக்கத்தில் நடப்பதையோ
தூக்கத்தில் நடப்பவர்கள் அறிந்திருப்பதில்லை
நடைப்பயிற்சியின் அவசியம் குறித்த
மருத்துவர்களின் பயமுறுத்தலாலும்
ஊடகங்களின் மிகைப்படுத்தலாலும்
ஏற்படுகின்ற மனஉலைச்சலாலேயே
அவர்கள் தூக்கத்தில் நடப்பதாக
அவர்களால் சொல்ல முடிவதில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
|
||||||||
|
||||||||
by Swathi on 25 Dec 2014 0 Comments | ||||||||
Tags: தூக்கம் Thookkam சேயோன் யாழ்வேந்தன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|