துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)
மணக்குடவர் உரை:
காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
துறந்தார் பெருமை துணைக்கூறின் - இருவகைப்பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினதென்று அளவிட்டுக் கூறப்புகின்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - அது இவ்வுலகத்தில் இதுவரை பிறந்திறந்தவரையெல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.
இரண்டும் முடியாதென்பது. கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத்திரிந்தது. கொண்ட அற்று எனினுமாம்.
கலைஞர் உரை:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
முற்றுந் துறந்த அம்மகான்களின் பெருமை அளவிட முடியாதது; அதைக் கணக்கெடுப்பது உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறந்தார்கள் என்பதைக் கணக்கெடுக்கப் புகுவதற்கு ஒப்பாகும்.