பேராசிரியை முனைவர் ஆர். பத்மமாலா (1978) ... கணினியியல் துறையிலிருந்து தமிழ்க் கணினிமொழியியல் துறைக்கு ஒரு நல்ல வரவு. ஆசிரியப் பணியையும் ஆய்வுப்பணியையும் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு ஆய்வாளர். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் ( முதலாவதாகத் தேர்ச்சிபெற்று, தங்கப்பதக்கம் பெற்றார்) , பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணினியியலில் எம்சிஏ பட்டம் பெற்றார். பின்னர் சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் கல்லூரியில் நான்கு ஆண்டுகளும், மும்பையில் ஒரு கல்லூரியில் ஓராண்டும், சென்னையில் அக்னி பொறியியல் கல்லூரியில் ஓராண்டும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வில் விருப்பம்கொண்டு, பதவியைத் துறந்து, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பிரிவில் பேரா. ந. தெய்வ சுந்தரம் வழிகாட்டுதலில் இணைந்தார். தமிழில் இயந்திர மொழிபெயர்ப்புமென்பொருளை உருவாக்குவதற்கு மிக அடிப்படையாகத் தேவைப்படும் தமிழ்த் தொடரியல் பகுப்பி ( Syntactic Parser) பற்றிய ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் தலைப்பு - Issues in Syntactic Parser for Modern Tamil என்பதாகும். ஆய்வின் தேவையை ஓட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இயற்கைமொழி ஆய்வு ( Natural Language Processing - NLP) என்ற முதுநிலைப் பட்டயப் படிப்பையும் முடித்தார்.
2014 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைக் கணினிமொழியியல் துறையில் பெற்றார். அதன்பின்னர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியிலும், தற்போது தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலும் கணினியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தேசிய, சர்வதேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று இதுவரை ஏழு ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். இவற்றில் பல உலகத்தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன.
மலேசியாவிலும் பாண்டிச்சேரியிலும் நடைபெற்ற உத்தமத்தின் மாநாட்டில் பங்கேற்று தமிழ்க் கணினிமொழியியல் தொடர்பான இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வு தமிழ்க்கணினிமொழியியல் ஆய்வில் ஒரு படிக்கல்லாக அமைந்துள்ளது. இயந்திரமொழிபெயர்ப்புக்கு மட்டுமல்லாமல், தமிழில் தானியங்கி இலக்கணப் பிழைதிருத்திக்கும் இவரது ஆய்வு பயன்படும். தொடரியல் பிழை மட்டுமல்லாமல், பொருண்மையியல் பிழைகளையும் களைவதற்கான வழிமுறைகளை இவர் முன்வைத்துள்ளார். 'பையன்கள் வந்தான்' என்பதைத் தொடரியல் அடிப்படையில் தவறு என்று காட்டக்கூடிய இவரது ஆய்வு, ' பூனை சிரித்தது', ' பாறை தூங்கியது' போன்ற பொருண்மையியல், உலகியல் அறிவு (Semantics and Pragmatics) ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளையும் எடுத்துக்காட்டக்கூடியதாக அமைந்துள்ளது பாராட்டுதலுக்கு உரியதாகும். உருபனியல், தொடரியல், பொருள்மயக்கம் (Word Sense Disambiguation) மூன்றையும் கையாளக்கூடிய தமிழ்க் கணிமொழியியல் வழிமுறைகளில் தற்போது இவர் ஈடுபட்டுள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவியுடன் இவர் தற்போது ஒரு ஆய்வுத்திட்டத்தை ( Development of a NLP Tool for Word Sense Disambiguation of Tamil words using Ontology Engineering and WordNet) மேற்கொண்டுவருகிறார்.
இவரது வளர்ச்சிக்கு மிக உறுதுணை இவரது தாயார் பேராசிரியை என். கமலா அவர்கள். இவர் பணி ஓய்வுபெற்ற ஒரு கணிதப்பேராசிரியை. முனைவர் பத்மமாலாவின் கணவரும் ( திரு. ஆர். இராஜேஸ்வரன்) ஒரு மென்பொருள்பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு. விருதுநகரைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் குடியிருப்பு. இலக்கிய இரசனையும் இவருக்கு அதிகம். இவரது முகநூல் பக்கத்தில் இது நன்கு வெளிப்படுகிறது. பேராசிரியை ஆர். பத்மமாலா அவர்கள் தமிழ்க்கணினிமொழியல், மொழித்தொழில்நுட்பத் துறையில் நிச்சயமாகப் பல சாதனைகளைப் புரிவார் என்று உறுதியாக நம்பலாம்.
|