|
||||||||
இன்றைய தமிழ்மொழி ஆய்வும் கணினிமொழியியலும் |
||||||||
இன்றைய தமிழ்மொழி ஆய்வும் கணினிமொழியியலும்
இன்றைய எழுத்துத்தமிழுக்கு ஒரு முறையான அகரமுதலி தயாரிக்கவேண்டுமென்றால், அனைத்துச் சொற்களுக்கும் உரிய இலக்கணவகைப்பாடு (grammatical category) அளிக்கப்படவேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டும்.
அனைத்து முனைகளிலும் - ஒலியியல், ஒலியனியல், உருபனியல், தொடரியல், பொருண்மையியல் போன்ற முனைகளில் -ஒரு சொல்லை ஆய்வுசெய்தல்வேண்டும். பழந்தமிழ் இலக்கண வகைப்பாடுகளைத் தாண்டி, புதிய வகைப்பாடுகள் வந்திருக்கலாம். அவ்வாறு வந்திருக்கிறதா, வந்திருந்தால் அவற்றை எவ்வாறு வகைப்படுத்துவது, அதற்கு என்ன அடிப்படைகளை அல்லது விதிகளை முன்வைப்பது போன்ற வினாக்கள் நம்முன் உள்ளன.
பெயர், வினை. பெயரடை, வினையடை ஆகியவற்றில் அடங்காதவற்றை -யெல்லாம் பொதுவாக இடைச்சொல் என்று அகரமுதலிகளில் கூறப்படுகிறது. இது சரியா? அதுபோன்று தொகைச்சொற்களில் எங்கு ஒற்று மிகும், எங்கு ஒற்று மிகாது போன்றவற்றில் ஒரு ஒழுங்கு பின்பற்றப்படவில்லை. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தினால்தான், தமிழ்க்கணினிமொழியியல் அடுத்த கட்டத்திற்கு நகரும். இலக்கண நூற்பாக்களையும் உரைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு இப்பணிகளை மேற்கொள்ளமுடியாது. நுட்பமான ஆய்வு தேவை.
இப்பணியை மேற்கொள்ளாமல் செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) , ஆழ்நிலை கற்றல் (Deep Learning) , நரம்புவலைப்பின்னல் ( Neural Network) போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கணினித்தமிழுக்குப் பயன்படுத்தமுடியாது. கூகுளிலும் மைக்ரோசாப்டிலும் ''அண்ணன்தம்பி சண்டை'' என்பதற்கு battle of brother-in-law என்று வருகிறது. இதற்குக் காரணம் முறையான அகரமுதலி அவற்றிற்கு இல்லை என்பதே ஆகும். கூகுளையோ மைக்ரோசாப்டையோ குறைகூறுவது தவறு.
ஒரு மொழியின் அகரமுதலிதான் அம்மொழியின் தொடரமைப்பு இலக்கணத்தை முறையாக மேற்கொள்ள உதவும்.
இதுபோன்று தொடரமைப்பு இலக்கணத்திலும் சில முக்கியமான பணிகள் உள்ளன. தமிழில் உள்ள சொற்றொடர் வகைகள் (sentence types) அனைத்தையும் திரட்டி, முறையாக அவற்றை வகைப்படுத்தவேண்டும். சொற்றொடர் வகைகளைத் தெளிவான அடிப்படையில் வரையறுக்கவேண்டும்.
இதையும் தாண்டி, பனுவல் வகைகளைப்பற்றிய (Text types) ஆய்வு தேவை. இப்பணிகளை மேற்கொள்ள முறையான வழிமுறைகள், திட்டங்கள் முன்வைக்கப்பட -வேண்டும்.
என்னைப்பொறுத்தவரையில் இதுபோன்ற திட்டம் தமிழுக்கு இப்போது மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அங்கொன்று இங்கொன்றாகச் சில தனிநபர்களும் நிறுவனத்தினரும் செயல்பட்டு வருகின்றனர். இது போதாது.
தமிழ் இலக்கணத்தில் மிக ஆழமான அறிவு உடைய அறிஞர்கள் இருக்கிறார்கள். மொழியியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு கணினியியல் அறிஞர்களும் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ளவேண்டும். கணினியியல் அறிஞர்கள் முன்வைக்கிற வினாக்களுக்கு விடை தேடும்போதுதான் நமது இலக்கண அறிவே கூர்மையடையும் என்பது எனது அனுபவம். எதற்கும் விதிகள் இல்லாமல் அவர்களால் கணினிநிரல்கள் எழுதமுடியாது. எனவே தமிழ் மொழி, மொழியியல் அறிஞர்கள் இந்த அறிஞர்களின் உதவியை முழுமையாகப் பெறவேண்டும்.
முடிவாகச் சொல்லப்போனால், இன்றைய தமிழுக்கு ஒரு முழுமையான இலக்கணம் முன்வைப்பதற்கு ... தமிழ்மொழி அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் மட்டும்போதாது.... கணினியியல் அறிஞர்களும் தேவை!. இதை நான் அனுபவத்தில் உணர்ந்து கூறுகிறேன்!
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|