|
||||||||
கணினியியல் வல்லுநர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் ... |
||||||||
தமிழ்க்கணினிமொழியியல் தொடர்பான முகநூல் ஊடாட்டத்தின்வழியே எனக்கு நண்பரான திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்களின் தமிழார்வமும் தமிழ்மொழி ஆய்வும் என்னை வியக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.
இதுவரை அவரை நான் நேரில் பார்த்தது இல்லை. தொலைபேசியில்கூட உரையாடிய நினைவு இல்லை. ஆனால் நாள்தோறும் என்னுடன் பழகிக்- கொண்டிருப்பவர்போல்தான் எனக்கு ஒரு உணர்வு.
தமிழ்மொழி தொடர்பான எனது முகநூல் பதிவுகளுக்கு உடனடியாகக் கருத்துரை வழங்குபவர் அவர். மிக நுட்பமாகவும், மிகுந்த அடக்கத்துடனும் கருத்துரை வழங்குவார்.
நெல்லை மாவட்டத்தில் பிறந்து , வளர்ந்து, கல்வி பெற்று, இன்று மிகச்சிறந்த ஒரு கணினிப் பொறியாளராக அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கூகிள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். அதற்குமுன்னர் ஆரக்கிள் நிறுவனம், ஹைச் பி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நானும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி!
தமிழ்மொழி இலக்கணத்தில் ... பழந்தமிழ் மட்டுமல்ல .. இன்றைய தமிழிலும் மிக ஆழமான, நுட்பமான அறிவைக்கொண்டிருக்கிறார். தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு கருத்தையும் முகநூலில் முன்வைக்கமாட்டார். குறிப்பாக, தமிழ்ப்புணர்ச்சி இலக்கணத்தில் நிரம்பிய அறிவு பெற்றவர். மறைந்த மருத்துவர் பொன்முடியார் அவர்களின் இலக்கணக்கோட்பாட்டால் (''தமிழ்வெல்லத்தாழி'' என்ற ஆய்வுநூலால்) கவரப்பட்டவர். மருத்துவரின் மறைவுக்குப்பின்னர், அவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 70,000 ( எழுபதாயிரம்) கொடுத்துதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய கணினியியல் துறையின் அறிவு .... உறுதியாகத் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ... குறிப்பாக மின்தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை!
அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மணிக்கணக்கில் இல்லை.... நாள்கணக்கில் அவருடன் தமிழ்மொழி, தமிழ்க்கணினிமொழியியல்பற்றி உரையாடவேண்டும் என்பது எனது நோக்கம். உறுதியாக ஒரு கட்டத்தில் அவர் இருக்குமிடத்திற்கே சென்று, தங்கியிருந்து, அவருடைய தொழில்நுட்ப அறிவைத் தெரிந்துகொண்டு வந்து, தமிழுக்குச் செயல்படுத்தவேண்டும் என்பது எனது விருப்பம்.
அயல்நாடுகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் செ.இரா. செல்வக்குமார், கு. கல்யாணசுந்தரம், திரு. இராமசாமி செல்வராசு ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்ற எனக்கு .... வயது அனுமதித்தால் (தற்போது எனக்கு 72) ... உறுதியாக அவரை விரைவில் அவரிடத்திலேயே சந்திப்பேன்.
அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|