|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மதிய உணவு– 18 |
||||||||
மதிய உணவு உண்பதற்கும் உண்ட பின்பு சிறிது ஓய்வெடுக்கவும் போதிய நேரத்தினை ஒதுக்க வேண்டும். உண்ணும் போது வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல் உணவில் மனதைச் செலுத்தி நன்றாகச் சுவைத்து சாப்பிட்டு பின்பு மன அமைதியுடன் சிறிது ஓய்வெடுக்க வேண்டும். தொடர் வேலைகளுக்கிடையே இதற்காகக் குறைந்தது 40 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். இது உடலிற்கும் மனதிற்கும் மிகுந்த நன்மையை அளிக்கும்.
எப்போது சாப்பிட வேண்டும் ?
காலை உணவினை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்ளாக சாப்பிட வேண்டும் எனப் பார்த்தோம். காலை உணவிலிருந்து நான்கு மணி கழித்து ஐந்து மணிநேரத்திற்குள்ளாக ( மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் ) மதிய உணவு சாப்பிட வேண்டும். என்றாலும் நன்றாகப் பசி ஏற்பட்டவுடன் சாப்பிடலாம். இயல்பாகவே சூரிய உதயத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் சீரணமாகும் ஆற்றல் உடலில் அதிகமாக இருக்கும். அதன் பின்பு செரிக்கும் ஆற்றலும் உணவினை உட்கிரகிக்கும் ஆற்றலும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். எனவே மதிய உணவைத் தவிர்ப்பதோ தள்ளிப் போடுவதோ கூடாது.
என்ன சாப்பிட வேண்டும் ?
உடலிற்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கலந்த சீர் உணவுதான் மதிய உணவாக இருக்க வேண்டும். இந்த சீர் உணவு உண்பது எல்லா வேளைகளுக்கும் பொருந்தும் என்றாலும் மதிய உணவில் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எல்லா ஊட்டச்சத்துக்களும் அதிகம் கலந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடல் இயக்கத்திற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவிற்கு குறையாமல் கொடுக்கக் கூடிய உணவு சீர் உணவு எனப்படும்.
தானியங்கள்
அரிசி, கம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயிறு போன்ற பல வகையான தானியங்களை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும். தினமும் அரிசி உணவு மட்டுமே பயன்படுத்தக் கூடாது. தற்போது பட்டைதீட்டப்பட்ட அரிசியே ( Polished Rice ) அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
உலகின் தலைசிறந்த தானியங்களில் முதன்மையானது அரிசி. பழங்காலத்தில் ஏராளமான அரிசி வகைகளில் நம் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன.
நெல் முறையாக நீரில் ஊறவைக்கப்பட்டு வேகவைக்கப்பட்டு ( புழுங்கல் ) பின்பு தவிடு நீக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அவை பல நிற வேறுபாடுகளுடன் இருந்தன. அவற்றில் ஊட்டச்சத்துக்களும் அதிகம் உண்டு. அரிசி ஆலைகள் வர ஆரம்பித்த பின்பாக தீட்டப்பட்ட வெள்ளை அரிசி வகைகளே இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. கேடுகள் அதிகம். ( உதாரணமாக B வகை வைட்டமின்கள் அரிசியைத் தீட்டும் போது தவிடுடன் போய்விடுவதால் செரிமானக் குறைவு ஏற்பட்டு உணவு நஞ்சாக மாறும் நிலை ஏற்படும் )
தீட்டப்படாத அரிசி வகைகளுடன் பிற தானியங்களையும் கலந்தே மதிய உணவிற்குப் பயன்படுத்த வேண்டும். மதிய உணவிற்கு எல்லா தானியங்களையும் கலந்த கலவை தானிய உணவாகவும் பயன்படுத்தலாம் அல்லது ஒரு நாளிற்கு ஒரு தானியத்தைப் பயன்படுத்தி சோறு செய்து சாப்பிடலாம். அரிசியைப் போன்றே கம்பு, வரகு, சாமை, திணை போன்ற தானியங்களைக் கொண்டு சோறு சமைக்கலாம். தக்காளிச்சோறு, புதினாச்சொறு, கறிவேப்பிலைச்சொறு, சர்க்கரைப் பொங்கல் போன்ற சோறு வகைகளும் இந்த தானியங்களைக் கொண்டு செய்யலாம். இது போன்ற வித விதமான தானிய உணவுகளை ஒவ்வொரு நாளும் மதிய உணவாகக் கொள்ளும் போது பல விதமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேரும். ஏழு உடற்கட்டுக்களுக்கும் உயிர் ஆற்றலுக்கும் முழுமையான ஊட்டம் கிடைப்பதால் உடல் வலுவாகும்.
காய்கள், கீரைகள்
கீரைகளும் காய்களும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது எனத் தெரிந்தும் பலர் அதனை பழக்கமாக்கிக் கொள்வதில்லை. இதுவே பெரும்பாலான நோய்கள் உடலில் உருவாக வழிவகுக்கிறது. “ கீரையில்லா உணவு கூரையில்லா வீடு “ என்பது பழமொழி. கூரையில்லாவிட்டால் அதனை வீடு எனச் சொல்ல முடியாது. அது போல கீரையில்லாத ஒன்றை நல உணவு எனச் சொல்ல முடியாது. தினமும் முறையாக ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். இது மருத்துவச் செலவைக் குறைக்கும் எளிய வழியாகும். கீரைகளையும் காய்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முழுமையாகக் கீரையையும் காய்களையும் மட்டும் கூட மதிய உணவாக்கிக் கொள்ளலாம்.
ஒரு நாளிற்கு தேவையான கீரைகளையும் காய்களையும் மூன்றில் ஒரு பாகம் பச்சையாகவும் இரண்டு பாகம் வேகவைத்தும் சாப்பிடுவது உடலிற்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பச்சைக்கீரைகளையும், காய்களையும் சமைக்காமல் உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். கீரை, காய்களைச் சாறாகப் பருகலாம். சிறு சிறு துண்டுகளாக வெட்டி மோர், மிளகு, கல் உப்பு, பெருங்காயம், கலந்து சாப்பிடலாம். காய்களுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சி, நாட்டுத் தக்காளி, பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை கலந்து அரைத்துப் பருகலாம். இப்படிப் பச்சையாகச் சாப்பிடுவதால் அது செரிமான மாவதற்கு உடலிலிருந்து ஆற்றலை ( எரிசக்தி – கலோரி ) எடுத்துக் கொண்டு உடல் எடை குறைய வழியாகும். உடல் ஊட்டம் குறையாமல் எடை குறைய இதுவே மிகச் சிறந்த வழி. காய்களைச் சமைப்பதால் உடலிற்குத் தேவையான சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே அளவான உடல் எடை உள்ளவர்களும் பச்சைக் காய்களைச் சாறாகவோ, சிறுதுண்டுகளாக்கியோ உண்ண வேண்டும்.
காய்களை சமைக்கும் போது அன்று புதிதாக வாங்கிய காய்களை பயன்படுத்தினால் முழுமையாக ஊட்டம் உடலுக்குக் கிடைக்கும். அன்று சமைத்த காய்களை அன்றே பயன்படுத்திவிடல் வேண்டும். “ முந்தின நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம் “ எனச் சித்தர்கள் கூறியுள்ளனர். ஊறுகாய் போன்ற உணவுகளைக் காய கல்பம் போலக் கெடாமல் செய்யும் வழிகளையும் சித்தர்கள் கூறியுள்ளனர். அவைகள் விதிவிலக்காகும். உதாரணத்திற்கு இஞ்சி எலுமிச்சை ஊறுகாயினைக் கூறலாம். இஞ்சியை தோல் நீக்கி குறுக்கு வாட்டமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு எலுமிச்சைப் பழத்தினை எட்டு துண்டுகளாக வெட்டி அதனுடன் கலந்து கொண்டு போதுமான அளவு இந்துப்பு போட்டு நன்றாகக் கலக்கி வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் சிறந்த ஊறுகாய் உருவாகிவிடும். இது பல மாதங்கள் கெடாது.
காய்களைக் கொண்டு அன்றாடம் செய்யும் உணவுகளான குழம்பு ( சாம்பார் ) இரசம், கூட்டு, பொரியல், அவியல், வற்றல், போன்றவற்றில் மிளகு, வெந்தயம், சீரகம், மல்லி விதை, பெருங்காயம் போன்ற பொருட்களை அதிகம் கலக்க வேண்டும். இதனால் காய்களின் முழுப் பலன் உடலுக்குக் கிடைக்கும். ( பல வகையான உணவு முறைகளின் பலன்களை உணவு என்ற தலைப்பில் பின்பு காணப் போகின்றோம் )
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், தனியா, பெருங்காயம், இந்துப்பு, கறிவேப்பிலை (காய்ந்தது அல்லது நெய் விட்டு இலேசாக வறுத்தது ) கலந்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை 5 கிராம் அளவு மதிய உணவு உண்பதற்கு முன்பாக மோரிலோ அல்லது வெந்நீரிலோ கலந்து சாப்பிட வேண்டும் அல்லது சோறு இரண்டு கவளத்துடன் கலந்து பசுநெய் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது வயிறு, குடல், சீரண உறுப்புகளுக்கு நன்மையை உண்டாக்கும். செரிமானத்தை தூண்டி கீரை, காய், தானிய உணவுகளின் முழுப் பலனும் உடலிற்குக் கிடைக்க இந்தக் கலவை உதவிபுரியும்.
மதிய உணவின் பலன்கள்
மதிய உணவிற்கு போதுமான நேரம் ஒதுக்கி கீரை, காய் உணவுகளை நன்றாகச் சுவைத்து உணவில் மனதைச் செலுத்தி உண்பதால் பல நன்மைகள் உண்டாகும்.
1. உடல் உற்சாகமும் மன ஆற்றலும் மேம்படும். செய்யும் வேலைகளில் மனதை முழுமையாகச் செலுத்தி சிறந்த திறமையை வெளிப்படுத்த முடியும். முடிவெடுக்கும் ஆற்றல் உயரும்.
2. மூளைச் சோர்வு நிலை வேகமாக மாறும். மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகள் போதுமான ஊட்டம் பெறுவதால் புதிய சிந்தனைகள் உருவாகும்.
3. மனதை உணவில் செலுத்திச் சாப்பிடுவது ஒரு யோகமாகச் சித்தர்கள் கூறுகிறார்கள். தியானத்தின் போதும் பிராணயாமத்தின் போதும் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் சில ஈடுபாட்டுடன் சாப்பிடுவதால் கிடைக்கிறது. எனவே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, தொலைப்பேசியில் பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. சிறிது நேரம் மனதை உணவுடன் பொருத்திச் சாப்பிடுவது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.
4. காலை உணவு போலவே முறையான மதிய உணவினால் உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், மன அழுத்தம் கட்டுப்படுகின்றது.
5. மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுகின்றது.
6. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகின்றது.
7. உடலின் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் சீராகி உடல் கழிவுகள் முறையாக வெளியேறும். மலச்சிக்கல் நீங்கும்.
8. நீண்ட நலமான ஆயுள் ஏற்படும்.
நலப்பயணம் தொடரும்.....................
|
||||||||
by Swathi on 12 Jan 2015 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் Lunch மதிய உணவு | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|