|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : அதிகாலை நீர் பருகுதல் – 12 |
||||||||
அதிகாலை நீர் பருகுதல்
அதிகாலை எழுந்தவுடன் நீர் பருகுதல் பல நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்துவதாக சித்தர்கள் கூறுகின்றனர். இப்பழக்கத்தினால் பல நோய்கள் உடலைத் தாக்காதவாறு பாதுகாப்பதோடு சில நோய்களுக்கு மருந்தாகவும் அமைகின்றது.
ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், பனி நீர் போன்ற பல வகையான நீர்களின் குணங்கள் தனித்தனியே சித்தர் நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று நாம் வழக்கத்தில் ஆற்று நீர் மட்டுமே பயன்படுத்துகின்றோம். பனி நீரினை சிறிது முயற்சி செய்தால் சேகரித்துப் பயன்படுத்தலாம்.
மருத நிலத்தில் (வயல்கள், மரங்கள் நிறைந்த பகுதி ) பாயும் ஆற்று நீரினைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைக் கீழ்க்காணும் சித்தர் பாடலின் மூலம் நாம் அறியலாம்.
“ஆற்றுநீர் வாதம் அனலம் கபத்தோடு
தோற்றுகின்ற தாகந் தொலைக்குமே – ஊற்றமிகும்
தேகத்தி னோ யையெலாஞ் சீறித் துரத்திவிடும்
போகத்தில் தாதுவுமாம் போற்று.”
அதிகாலையில் தூய்மையான ஆற்று நீரினைப் பருகுவதால் உயிராற்றல் மேம்படும். வளி, அழல், ஐயம் என்கிற மூன்று உயிர் ஆற்றல்களின் மாறுபாடுகள் சீராகும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஏழு உடற்கட்டுகளும் (விளக்கம் பகுதி 2 – ல் உள்ளது) தூய்மையாகும். உடலின் அடிப்படைத் திசுக்களில் கலந்துள்ள நச்சுத் தன்மை நீக்கப்படும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும். பெண்களுக்கு கரு உண்டாகும் ஆற்றல் அதிகப்படும் என மேற்கண்ட சித்தர் பாடல் தெரிவிக்கின்றது.
பனி நீரினால் மிகுந்த நன்மையுண்டாகும் என சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பனி நீர் சேகரிக்கும் விதம்
பனிக்க்காலங்க்களில் மெல்லிய பருத்தித் துணியினை வாய் அகலமான பாத்திரத்தில் தளர்வாகக் கட்டி விட்டால் துணியில் விழக்கூடிய பனி நீரானது கீழ் உள்ள பாத்திரத்தில் சேகரமாகும். பனிக் காலத்தில் மட்டும் குடிக்க வேண்டும். முதலில் 200 மி.லி. குடிக்க தொடங்கி சிறிது சிறிதாக உயர்த்தி 1400 மி.லி. வரை குடிக்கலாம் என சித்தர் நூலகள் தெரிவிக்கின்றன. இதனை பனி பெய்யும் காலத்தில் மட்டும் செய்தாலே ஆண்டு முழுவதும் உடல் நலத்தோடு வாழலாம்.
இவ்வாறு பயன்படுத்தும் பனி நீரினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
சூரியன் உதிப்பதற்கு முன்பாக சிறுநீரும் மலமும் கழிப்பதற்கு முன்பாக பனி நீரினை அருந்தல் வேண்டும். அப்படிச் செய்வதால் அது அமிர்தம் போல உடலினை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
உடலில் ஏற்பட்டுள்ள வயிற்றுப்புண் (Peptic Ulcer), நீரிழிவு (Diabetes mellitus ), சளியுடன் கூடிய இருமல், பேதி நோய், மூல நோய், அதி இரத்த அழுத்தம் (Hyper tension ), பல வகையான காய்ச்சல், மலக்கட்டு, சிறுநீர் நோய்கள் போன்ற பல வகையான நோய்கள் விரைவில் உடலை விட்டு நீங்குவதற்கு “பனி நீர் அருந்தல்” வழிவகுக்கும் என சித்தர்கள் தெரிவிகின்றனர்.
பனி நீரினை சுரம், சளி போன்ற நிலைகளில் பயன்படுத்தும்போது காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும். பனி நீர் சிறப்பித்துக் கூறப்பட்டதற்கு காரணம் அதன் தூய்மையும் வான்வெளியிலுள்ள ஆற்றல் ( காந்த ஆற்றல் ) அந்நீரில் கலந்து அதன் குணம் மேம்படுவதால் தான். ஆனால் ஆற்று நீரின் குணம் இடத்திற்கு இடம் வேறுபடும்.
“ தண்ணீர் நில நலத்தால்” - மூதுரை
“ நீரின் குணம் வேறிலை; பாரின் குணமே வேறு” - தேரையர் தரு
“ தண்ணீர் குண மெல்லாந் தான் கேள் மடமயிலே மண்ணின் குணமல்லால் மற்றுண்டோ” - பொருட்பண்பு நூல்
“ நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும்” - திருக்குறள்
தமிழ் இலக்கிய நூல்களில் இவ்வாறு சொல்லப் பட்டிருப்பதால் நீரின் தனிகுணம் என்று தனியே கிடையாது. அது தங்கும் இடத்தின் வேறுபாடுகளாலேயே அதன் குணம் மாறுபடுகின்றது எனத் தெளிவாகத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.
எனவே கடல்நீர் குணம், ஆற்று நீர் குணம் (தாமிரபரணி, காவிரி, கங்கை, நர்மதா, துங்கபத்ரா போன்ற ஆறு ஒவ்வொன்றின் தனி குணங்களும் வேறுபடும் ), கிணற்று நீர் குணம், மழை நீர் குணம், ஊற்று நீர் குணம் இவற்றின் தனித்தனியான குணங்கள் அவற்றால் தீரும் நோய்கள் சித்தர் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விரிவாக சித்தர்கள் ஆய்வு செய்து நமக்கு விளக்கியிருக்கின்றார்கள் என்கிற செய்தியால் ஒவ்வொரு தமிழனும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
எந்த வகையான நீராக இருந்தாலும் பொதுவாக ஏற்படும் நன்மைகளை இப்போது நாம் பார்க்கலாம். தூங்கி எழுந்து வாய் தூய்மை செய்த பின்பு மலம், சிறுநீர் கழிப்பதற்கு முன்பாகவே தூய நீரினை அருந்தல் வேண்டும்.
அருந்தும் அளவினை சிறிது சிறிதாக உயர்த்திக் கொள்ளலாம். வாந்தி வரும் உணர்ச்சி ஏற்பட்டால் நிறுத்திக் கொள்ளலாம். 1. உடலின் உள் உறுப்புகள் தூய்மையாவதற்கு வழியாகும். 2. குடல் தூய்மையாவதால் சீரணம் சீராக நடைபெற்று உணவின் நுண் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உட்கிரகிக்கும் ஆற்றல் குடலுக்குக் கிடைக்கும். 3. இரத்த ஓட்டம் சீராகி இரத்தத்தில் உள்ள மலினங்கள் வேகமாக வெளியேறும். இதனால் முகப்பொலிவு, தோல் பளபளப்பு ஏற்படும். 4. உடல் எடை குறைக்க எண்ணுபவர்கள் அதிகாலை நீர் குடிப்பதோடு ஒரு உணவிற்கும் மற்றொரு உணவிற்கு இடையே போதுமான நீர் அருந்துதல் வேண்டும். இதனால் இடையிடையே ஏதாவது சிறு உணவு உண்ணும் எண்ணம் ஏற்படாமலிருக்கும். உடல் உற்சாகத்திற்கும் குறைவிருக்காது. 5. உடல் திசுக்களில் பெரும்பாலான பகுதி நீரினால் நிரப்பப் பட்டிருக்கும். குறிப்பாக மூளைத் திசுவில் 75% நீர்தான் உள்ளது. அதிகாலை நீர் பருகுவதால் மூளையின் செயல்பாடு சீராகும். உடல் சோம்பல், மனம் தளர்ச்சி நீங்கும். 6. மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல் நீங்கும். 7. உடலின் நிணநீர்ச் சுரப்பிகளின் ஆற்றல் மேம்படுவதால் எதிர்ப்பாற்றல் பெருகும். 8. தாகம் ஏற்பட்ட போது நீர் அருந்தாமல் விட்டால் மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, இரத்தக்குறைவு, மலச்சிக்கல், அதி இரத்த அழுத்தம், உணவில் வெறுப்பு, சிறுநீர்க் கல், உடல் பருமல், பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இந்த நிலைகளில் அதிகாலையில் நீர் பருகுவதால் அது மருத்துவ முறையாக பயன்பட்டு அந்த நோய்கள் தீர வழியாகும்.
அதிகாலை நீர் அருந்துவதாலேயே சில நோய்களை முற்றிலும் நீக்கிவிட முடியும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“நீரின்றி உடல் நலத்தினைக் காக்க இயலாது.”
நலப் பயணம் தொடரும்..............
|
||||||||
by Swathi on 02 Dec 2014 3 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam Athikalai Siddha Maruthuva Kurippugal Maruthuva Kurippugal Tamil Siddha Maruthuva Thodar சித்த மருத்துவம் அதிகாலை | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|