|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : துயில் எழுதல் – 5 |
||||||||
துயில் எழுதல் நாள் ஒழுக்கம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்ட விதிகளில் முதன்மையானது துயில் எழுதல் ஆகும். அதிகாலையிலேயே உறக்கத்திலிருந்து எழுதல் வேண்டும் என பல சித்தர்கள் கூறியுள்ளார்கள். காலை 4 மணி முதல் 5.30க்கு உள்ளாக விழித்தல் வேண்டும். இதனால் உடல் நலமும் மன நலமும் பாதுகாக்கப்படும். பதார்த்த குண சிந்தாமணி எனும் சித்தர் நூல் அதிகாலைத் துயிலெழுவதால் ஏற்படும் நன்மைகளை ஒரு பாடலின் மூலம் விளக்குகின்றது. “புத்தி யதற்குப் பொருந்து தெளிவளிக்கும் சுத்த நரம்பினற் றூய்மையுறும் – பித்தொழியும் தால வழி வாத பித்தந் தத்த நிலை மன்னுமதி காலை விழிப்பின் குணத்தைக் காண்.” புத்தி தெளிவு உண்டாகி நரம்பு மண்டலங்களின் இயக்கம் சீராகும். படபடப்பு, மன அழுத்தம், மனப்பிதற்றல் நீங்கும். உயிர் ஆற்றல்களாகிய வளி, அழல், ஐயம் ஆகியவற்றின் இயக்கம் சீராகும். இதனால் உடல் முழுமையும் இயக்கங்கள் சீராகும். (இதற்கு முந்திய வாரம் உயிர் என்ற தலைப்பில் நாம் பார்த்த உடல் இயக்கங்கள்). உறங்கி விழித்தவுடன் பார்க்கத்தகுந்த பொருட்களையும் பார்க்கக் கூடாதவற்றையும் சித்தர் நூல்கள் வகைப்படுத்தியுள்ளன. பொதுவாக நலம் தரும் பொருட்களைப் பார்ப்பது நல்லது. இயற்கைப் பொருட்களான செடி, கொடி, மரம், மலை, மேகம், வயல், பூ, பழம், பசு, கன்று, தமது உள்ளங்கை, மனைவி, குழந்தைகள் இவற்றைப் பார்த்தால் நலம். தூங்கி எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்ப்பது மிகவும் சிறப்புடையது. இது உடல் நலத்தையும் மன மகிழ்ச்சியும் சிறந்த அறிவையும் உண்டாக்கும். சிறந்த வெற்றியாளராவதற்கும் நலமான உடலைப் பெறவும் உயர்ந்த அறிவினைப் பெறவும் நீண்ட ஆயுளைப் பெறவும் சிறந்த திறமை வெளிப்படவும் அதிகாலை துயிலெழுதல் என்கிற எளிய பழக்கத்தை பின்பற்றுதல் வேண்டும். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அதிகாலை எழுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதிகாலை எழுவதை ஒவ்வொருவரும் முக்கியக் கடமையாகக் கொள்ளல் வேண்டும். அதுவே சமுதாயக் கடமையாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அரிஸ்டாட்டில் அதிகாலை எழுவதை உடல் நலம் மன நலம் இவற்றை மேம்படுத்தி அறிவைப் பெருக்கும் செயலாகக் குறிப்பிடுகின்றார். அதிகாலை எழுவதால் ஏற்படும் நன்மைகள். 1. புத்துணர்வு, மனத்தெளிவு, உயர் ஞானம் நேர்மறையான எண்ணம் ஏற்படும். 2. படபடப்பு, பதட்டம், மனஅழுத்தம், எதிர்மறையான எண்ணங்கள் முழுமையாக நீங்கும். 3. உடல் கழிவுகள் முழுமையாக உடலை விட்டு நீங்கும். உடலில் கலந்துள்ள நச்சுக்கள் வெளியேறும். 4. உடலின் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் சீராகும். 5. காலையிலேயே சீரண உறுப்புகள் சீராகச் செயல்படத் தொடங்கும். உணவின் நுண் ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். நாள் முழுவதும் உற்சாகத்திற்குக் குறைவிருக்காது. 6. கண்பார்வைத் தெளிவாகும். 7. இரவில் விரைவாக உறங்கி அதிகாலை எழுபவர்களுக்கு உடல் பருமன் எற்படுவதில்லை. உடல்வாகு பாதுகாக்கப்படுவதால் உடல்சோர்வு, உடல்வலி ஏற்படுவதில்லை. 8. மூச்சுப்பாதையில் உள்ள நச்சுப் பொருட்கள், தூசுகள், கிருமிகளின் கழிவுகள் அதிகாலை எழுவதால் வேகமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் மூச்சுப்பாதை நோய்களிலிருந்து விடுபட முடியும். 9. அதிகாலையில் உடலும் சுற்றுப்புறச் சூழலும் ஒத்து இயங்குவதால் சிறந்த நன்மைகள் உண்டாகும். முக்கியமாக அதிக பிராணவாயு உட்கிரகிக்கப்படும். மேலும் சிறந்த பல வான் ஆற்றல்கள் உடலிற்குக் கிடைக்கும். 10. அதிகாலை எழுவதால் உடலின் இயக்குநீர்கள் (Hormones) செயல்பாடு சீராவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல் உறுதிப்படுகின்றது. 11. அதிகாலை எழுவது மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, ஆசனப்பயிற்சி, தியானப்பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வதற்கு அடிப்படையாகின்றது. 12. ஒரு நாளின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்துதல், திட்டமிடுதல், சிறந்த குறிக்கோளை வகுத்தல் போன்றவற்றிற்கு அதிகாலையே சிறந்தது. மாணவர்களுக்கு படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம் அதிகாலை.
ஆய்வுகள் அடிப்படையிலான சில கருத்துக்கள் 1. அதிகாலை எழுபவர்கள் காலதாமதமாக எழுபவர்களை விட மகிழ்வோடும் நேர்மறையான எண்ணங்களோடும் நலமான வாழ்வு வாழ்வதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2. அதிகாலை எழுபவர்களால் பிரச்சனைகளை முன்கூட்டியே அறியும் திறன் அதிகரித்து அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களை வெகுவாகக் குறைக்கும் ஆற்றலும் அதிகரிக்கிறது. கலை, தொழில், கல்வி போன்ற துறைகளுக்கு இந்த ஆற்றல் மிகவும் அவசியம். 3. இரவு பகல் சுழற்சி (Circadian Rhythm) சீராவதன் மூலம் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகிறது. உலகியல் சுழற்சிக்கு ஏற்றாற்போன்ற உடல் தகவமைப்பு அதிகாலை எழுவதன் மூலம் ஏற்பட்டு சுழலுக்கு ஏற்ற உடல்கட்டினை உண்டாகின்றது. 4. அதிகாலை எழுபவர்கள் நல்லார்வம் உடையவர்களாக உள்ளனர். எந்த ஒரு நிகழ்வையும் நன்மையாகவே பார்க்கும் குணமுடையவர்கள். நன்மையே எப்போதும் நடக்கும் என்கிற நேர்மறை எண்ணமுடன் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான நடத்தையுடையவர்களாக இருப்பார்கள். 5. மூளை நரம்பு வேதிப்பொருட்களின் (Neurotransmitters) செயல்கள் சீராவதால் மனதின் வன்செயல், படபடப்பு, அழுத்தம் போன்ற எதிர்மறை நிகழ்வுகள் நீங்கி அன்பு, பாசம் போன்றவை மேலெழுகின்றது.
அதிகாலை எழ சில வழிகள் : 1. இரவு விரைவாக உறங்கச் செல்லல் வேண்டும். இதனால் அவசியமற்ற சந்திப்புக்கள், பேச்சுக்கள், தேவையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படும். பொதுவாகவே ஒரு நாளின் முக்கியமான வேலைகள் மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும். அதன்பின்பு பொதுவாக ஒரு தளர்வு மனப்பான்மை ஏற்பட்டு எந்த வேலையையும் மெதுவாகச் செய்யும் எண்ணம் மேலோங்கும். இதனால் இரவு வெகுநேரம் கண்விழிக்க வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுகின்றது. இதனை முறைப்படுத்த வேண்டும் 2. காலை 4.00 மணிக்கு எழுவதை இலக்காகக் கொள்ளவேண்டும். ஒரே நாளில் எழக்கூடாது. ஒரு நாளிற்கு 15-20 நிமிடங்கள் முன்பாக எழுந்து பழகியபின்பு சிறிது சிறிதாக நேரத்தைக் குறைக்க வேண்டும். 3. குறைந்த நேரத்தில் எழ எண்ணுபவர்கள் எழுப்பும் ஒலி கருவியை (Alarm) படுக்கையை விட்டு சற்று தொலைவில் வைக்க வேண்டும். ஒலி எழுந்தவுடன் படுக்கையறையை விட்டு விலகிவிட வேண்டும். தூங்கி எழும்போதே உயர்ந்த குறிக்கோளை மனதில் எண்ணிக் கொள்ளல் வேண்டும். ஒரு நாளின் முதல் வெற்றிப்படி என்பது அதிகாலை எழுவது. அடுத்த வாரம் அடுத்த ஒரு நிகழ்வோடு தொடரலாம். |
||||||||
by Swathi on 13 Oct 2014 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் துயில் எழுதல் அதிகாலை எழுவதால் நன்மைகள் கண்பார்வை தெளிவாக படபடப்பு பதட்டம் நீங்க | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|