தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்க அமைச்சரைச் சுற்றமாகவுடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; செற்றார் செயக்கிடந்தது இல் - பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்று மில்லை.
தக்கார் அமைச்சுத் தொழிலுக்குத் தகுதியுடையார். நட்புப்பிரித்தல், பகைபெருக்குதல், உட்பகை விளைத்தல், பொருதல், வஞ்சித்தல், முதலிய பல்வேறு வலக்காரங்களை (தந்திரங்களை)ப் பகைவர் கையாளினும், தகுந்த அமைச்சர் துணைகொண்டு தானும் அறிந்தொழுக வல்லானுக்கு ஒரு தீங்குஞ் செய்ய முடியா தென்பார், 'செற்றார் செயக்கிடந்த தில் ' என்றார்.
கலைஞர் உரை:
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்
அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும்
விளைவிக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோ சனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.