பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலபேரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன்.
பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும். பொதுவாக குறிஞ்சித் திணையானது தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியொருத்திக்குமிடையே நிகழும் ``புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமுமாகும் (கூடல்)’’.
குறுந்தொகைப் பாடல் எண்: 40 (நாற்பது)
ஆசிரியர் செம்புலப்பெயனீரார்
திணை - குறிஞ்சி
தலைவன் கூற்று – தலைவியிடம் தலைவன் கூறுதல் தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயமேற்படுகிறது, எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானே என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் இதோ:
``யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.
யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;
பாடலின் பொருள்: என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்? எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே! இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.
|