|
||||||||
சுவடுகள் |
||||||||
“உன் பேரென்னம்மா?...” “திவ்யா...”
“எத்தனாவது படிக்கிறீங்க?...”
“அஞ்சாவது...”
“இது யாரு?... உன் தம்பியா?... பேரென்ன?...”
“மாறன்... மூனாவது படிக்கிறான்...”
“சரி... இந்த டிராயிங்கை கையில வச்சிக்கிட்டு, நான் சொல்றத அப்படியே இந்தக் கேமராவைப் பாத்து சொல்லணும்... சரியா?... நல்லா கவனிச்சுக்க... “இந்த டிராயிங்க வாங்குனது மூலமா, முகப்பேர்லருந்து சவீதாக்கான்றவங்க எங்களுக்கு நோட்புக்கு, பேக்கு, ஜாமன்ட்ரி பாக்ஸெல்லாம் வாங்கிக் குடுத்துருக்காங்க... அவங்களுக்கு ரொம்ப நன்றி...” அப்படின்னு சொல்லணும்... சொல்லிடுவியா?...”
பெண்கள் எப்போதும் மனப்பாடம் செய்து கொள்வதில் ஆண்களைவிடத் திறமைசாலிகள். திவ்யா ஒரே மூச்சியில் நான் சொன்னதை அப்படியே சொன்னாள். கேமராவை ஆஃப் செய்தேன். அவள் தம்பி மாறன் சிரித்தபடியே கையில் நோட்டுப் புத்தகங்களைப் பிடித்துக்கொண்டு கேமராவைப் பார்த்து அதிசயித்தபடியே நின்றிருந்தான்.
இப்போது இந்த நிகழ்வு நடப்பதற்குக் காரணத்தை யோசிக்கிறேன்...
“மனுசனாப் பொறந்தவன், செத்ததுக்கப்புறம் அவன் பேர் சொல்றமாதிரி எதையாவது செஞ்சுட்டுப் போகணும். அட்லீஸ்ட், ஒரு மரத்தையாவது நட்டுட்டுப் போகணும்... என்று ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனம், திடீரென்று ஒரு நாள் என் மனதுக்குள் கேட்டது.
வீட்டுக்கொரு மரம் வளர்க்க நான் தயார், மரம் வளர்ப்பதற்கு வீடு வேண்டுமே... அதைத் தருவதற்கு யார் தயார்?... அதனால் மரம் வளர்க்கும் எண்ணத்தை அதற்கு மேல் வளர்க்க முடியாமல், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம்தான் இது.
எனக்கு அவ்வப்போது பொழுதுபோக்காய் ஓவியம் வரையும் பழக்கம் இருந்து வந்தது. ஒரு நாள் நண்பர் திருமணத்துக்கு அன்பளிப்பாய் என்ன வாங்குவது என்று தெரியாமல் இருந்தபோது, அவரது ஓவியத்தையே வரைந்து பரிசளித்தேன். மறுநாள் இன்னொருவர் தன் நண்பருக்குப் பரிசளிக்க அவரது ஓவியத்தை வரைந்து தரச் சொல்லிக் கேட்டார்.
நேரமில்லை என்று நான் சொல்ல, பணம் தருகிறேன் என்று அவர் சொல்ல, அட, இதுகூட நல்லாருக்கே... என்று நினைத்து, வரைந்து கொடுத்தேன். ஐநூறு ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை எனக்காய் செலவு செய்து கொள்வதில் உடன்பாடில்லை. கலையால் கிடைத்த பணம், அந்த கலைமகளின் ஆணையாய் நினைத்து கல்விக்கே அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
முகநூலில் ஒரு அறிவிப்பு விடுத்தேன்,
“ஒரு ஓவியத்தின் விலை ரூபாய் 500. அந்தப் பணமும் அடிப்படை வசதிகளே குறைவாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்படும்... அந்த ஓவியத்தை வாங்கியதால் நன்மையடையும் குழந்தைகள் உங்களுக்கு நன்றி சொல்லும் காணொளியும் (வீடியோ) உங்கள் உள்பெட்டியில் பதிவேற்றம் செய்யப்படும்” என்று,
சில நட்புக்கள் கரம் கொடுத்தன.
அதில் முதல் நட்பின் வேண்டுகோளின் பேரில் வரைந்த ஓவியம்தான் இது. இந்தப் பணம் காந்தி நகரில் ஒரு சேரியில் வசிக்கும் குழந்தைகளுக்காகச் செலவிடப்பட்டது.
மனதுக்குள் ஏதோ ஒரு திருப்தி.
இவ்வளவும் நான் எதிர்பார்த்தபடி நடந்தது. ஆனால் நானே எதிர்பாராத ஒன்று.
இந்தச் செயலை நான் ஆரம்பித்த நாள் ஜூலை 15. காமராஜரின் பிறந்தநாள்.
நான் பரிசளித்ததும் அவரது ஓவியம்தான்.
|
||||||||
by Rajeshkumar Jayaraman on 29 Dec 2014 2 Comments | ||||||||
Tags: Rajesh Kumar Short Stories ராஜேஷ் குமார் சிறுகதைகள் Suvadugal சுவடுகள் | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|