|
||||||||
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குமுன் / தேர்வில் கடைப்பிடிக்கவேண்டிய அத்தியாவசிய உத்திகள்-பேராசிரியர் அறிஞர் அப்பாத்துரை |
||||||||
வரும் 24-08-2014 அன்று ஐ.ஏ.எஸ். தேர்வு.
அண்மையில் யு.ப்பி.எஸ்.சி. “ஆங்கில மொழியறிவைச் சோதிக்கும் காம்ப்ரிஹென்சன் கேள்விகள், தேர்ச்சிக்கும், தரத்துக்கும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என்று அறிவித்திருப்பது குறித்து எந்தக் கவலையும் அடையத் தேவையில்லை. அது அதிகபட்சம் 20-30 மதிப்பெண்களுக்குள் தான் இருக்கும்.
நீதிமன்றத்தைச் சிலர் அணுகக்கூடும். வருவது வரட்டும்.இந்த மாற்றம் உங்கள் மனதைத் தளரச் செய்ய அனுமதிக்கக்கூடாது.
புதிதாக எதையும் படிப்பதை நிறுத்திடுக. படித்தவற்றைத் திருப்பிப் பார்த்தால் போதும்.
அது வருகிறதாம்! இது ரொம்ப முக்கியமாம் ! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இது வரை படிக்காத எதையும் படிக்க முயல்வது ஏற்கனவே நாம் படித்துத் தெளிவாய்ப் புரிந்து வைத்திருப்பவற்றைப் பெரிதும் பாதிக்கும்.
ஏற்கனவே கேள்வித்தாள் தயாராகியிருக்கும்.எனவே இப்போதைய செய்தி(த்தாள்)களில் சிரத்தை செலுத்த வேண்டாம்.
இரண்டாம் தாளுக்கான மாதிரி வினாக்களில் பயிற்சி தொடரட்டும்.
தேர்வுக்கு முந்திய நாள் 23-08-2014 இரவு சீக்கிரமே படுக்கைக்குச் சென்றுவிடவேண்டும். தேர்வு அன்று காலையில் எதையுமே படிக்கக்கூடாது.(மிகமிக நல்லது); தேர்வுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிச்சயமாக எதையும் படிக்கவே கூடாது(மிக நல்லது); தேர்வில் உங்கள் மூளை சோர்வில்லாமல், முன்னெச்சரிக்கையோடு, முழு சுறுசுறுப்புடன் தெளிவாகச் செயல்பட இது மிக மிக அவசியம். ஐ.ஏ.எஸ். தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசிய உத்திகள்.
தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து, அப்படியே பின்பற்றவேண்டும்.
தேர்வு எண்ணைச் சரியாக உரிய இடத்தில் நிரப்பிடுக.
வினாத்தாளில் ,ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் மிகக் கவனமாகப் படித்து, அதற்கேற்ப விடை அளித்தல் வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எது/எவை சரியானது / சரியானவை என்று கண்டுபிடிக்கச் சொல்கிறார்களா அல்லது எது/எவை தவறானது / தவறானவை என்று கண்டுபிடிக்கச் சொல்கிறார்களா என்று நுட்பமாகக் கவனிக்காமல் தவறாகப் புரிந்துகொண்டு விடையளிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
தவறான விடைகளை / கூற்றுக்களைக் கண்டுபிடிக்கச் சொல்லும் வினாக்களில் ஒரு வேளை எல்லாமே சரியானவைகளாக இருந்தால் "நன் ஆஃப் தி அபோவ்" என்பது தான் சரியான விடை. ஆனால் பலர் குழப்பத்தில் ஆல் ஆஃப் தி அபோவ் என்பதைக் குறிப்பிட்டு மதிப்பெண்களை இழக்கிறார்கள்.
அதே போல் சரியான விடைகளை / கூற்றுக்களைக் கண்டுபிடிக்கச் சொல்லும் வினாக்களில், ஒரு வேளை எல்லாமே தவறானவைகளாக இருந்தாலும் "நன் ஆஃப் தி அபோவ்" என்பது தான் சரியான விடை. இந்தத் தெளிவு வேண்டும்.
இரண்டாம் தாளில் கணிதம் தொடர்பான கேள்விகளை, (அது முதலிலேயே கேட்கப்பட்டிருந்தாலும்) கடைசியில் தான் விடையளித்தல் வேண்டும்.. தேர்ச்சிக்கும், தரத்துக்கும் எடுத்துக் கொள்ளப்படாத ஆங்கில மொழியறிவைச் சோதிக்கும் காம்ப்ரிஹென்சன் கேள்விகள் இவை இவையெனக் குறிப்பிடப்பட்டிருப்பின் மட்டும் கணிதம் சார்ந்த கேள்விகளுக்கும் பிறகு, கட்டக் கடைசியில் அவற்றுக்கு விடையளித்தால் போதும்.
நன்றாகத் தெரிந்த கேள்விகளுக்கு உடனடியாக விடையளித்து, அவற்றில் சேமிக்கின்ற நேரத்தைச் சிறிது சிந்தித்து விடையளிக்க வேண்டிய கேள்விகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தவறான விடைகளுக்கு 1/3 பங்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவதால் சும்மா ஹேஸ்யத்தில் சரமாரியாக விடையளிக்கும் போக்கு முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள 4 வாய்ப்புகளில்,இரண்டு வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தி, எஞ்சியிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்று தான் விடையாக இருக்கமுடியும் என்ற நிலையில், சரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், ஹேஸ்யத்துக்கு சற்று மதிப்பளிக்கலாம். எடுத்துக்காட்டாக 4 கேள்விகளுக்கு இம்முறையில் விடையளித்து ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே சரியான விடை அமைந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் மதிப்பெண் மீதி 3 தவறான விடையளிப்புக்கான மதிப்பெண் குறைவை ஈடுகட்டிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடை அமைந்தால் நமக்கு லாபம் தானே! |
||||||||
by Swathi on 18 Aug 2014 0 Comments | ||||||||
Tags: ஐ.ஏ.எஸ் தேர்வு IAS Exam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|