வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர் தூப்புல் வேதாந்த தேசிகன். கி.பி. 1268ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தில், அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மையார் தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் என்ற இடத்தில் அவதரித்தார்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளிப் பெருமாள் கோயில் எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாகும். பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபயவேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டார். அவரது 750 -வது திருநட்சத்திரநாள் (பிறந்தநாள்) விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
வரும் புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில் வார்ஷீக மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
12-9-2018 முதல் 11 நாட்கள் மிகச் சிறப்புடன் மஹோத்ஸவம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்றான காஞ்சிபுரம் களை கட்டத் தொடங்கி உள்ளது.
|