நமது பாரம்பரியப் பயிர்களிலேயே உன்னதமான பயிர் வாழை. வாழைசாகுபடி என்பது 3000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு கொண்டது. நாம் வழிபாட்டுத்தளங்களில் தொடங்கி வாழ்க்கையின் அனைத்து விஷேசங்களுக்கும் வாழையைப் பயன்படுத்துகிறோம். அதன் அடி முதல் நுனிவரை அனைத்துமே மனிதகுலத்திற்கு பல வகைகளில் பயன்படுவதால் தியாகத்தை வாழைக்கு ஈடாகச் சொல்வார்கள்!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்! வாழைப்போல தன்னைத் தந்து தியாகியாகலாம்....!
என எழுதியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன் வாழையின் பூ, இலை, காய், கனி, தண்டு, நார்பகுதி... என எதுவும் வீணாவதில்லை. மகத்தான மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்றவை. அதுவும் நமது பாரம்பரிய வாழை ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, வெவ்வேறு மகத்துவம் கொண்டவை! கற்பூரவல்லி இதை தேன் வாழை என்றும் அழைப்பதுண்டு, உடல் சூடு நீக்கி குளிரச்சி தரும்!
செவ்வாழை ஈடு இணையற்ற ஊட்டச்சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சத்தி தரவல்லது. உயிரணுக்களை அதிகப்படுத்தும்!
நேந்திரன் பழ ருசியோ சொல்லிமாளாது. சிப்ஸ்க்கு பிரபலமானது. இதில் விட்டமின் A யும், கால்சியமும் அதிகம். பசி தாங்கும், குடற்புழுக்களை நீக்கி வயிறை சுத்தப்படுத்தும். ஏலக்கி வாழையின் சுவையோ தனித்துவமானது. நமது செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடியது.
மொந்தன் பழத்தை அம்மை நோய் கண்டவர்களுக்கு கிராமத்தில் தருவது வழக்கம். ரஸ்தாலி உடல் வறட்சியை நீக்கும்.
குமரி மாவட்டத்தில் மட்டி வாழை பிரபலமானது. ரொம்பச்சத்தானது. பூவன்பழம் மூலநோய்க்கு மருந்தாகும். மலைவாழை ரத்தவிருத்திக்கு உதவும். பேயன்பழம் வயிற்றுப்புண், குடல்புண் ஆற்றும்! நாட்டுவாழைப்பழங்கள் பொதுவாக நல்ல மலமிளக்கிகள்!
ஆக, சொல்லித்தீராத நலன்களை தரக்கூடிய வாழையை ஏழைகளின் கனி என்பார்கள்! ஆப்பிள்,மாதுளம்,கொய்யா வாங்கமுடியாத எளிய, ஏழைநடுத்தர மக்களின் ஓரே கனியென்று வாழையைச் சொல்லிவந்தோம்.
சமீபகாலமாக விவசாயத்தில் செய்யப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் நம் பாரம்பரிய பழவகையை நம்மிடமிருந்து பறிபோகச்செய்தவண்ணம் உள்ளன.
விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அதீதமான வணிக பேராசைகளும் விவசாயத்தை, அதன் ஆரோக்கியமான தளத்திலிருந்து ஆபத்தான தளங்களுக்கு பயணப்பட வைக்கின்றன. வீரிய ஓட்டுரக வாழைகள் என அறிமுகப்படுத்தப்பட்ட வரிசையில் ஜீ - 9 என்பதாகச் சொல்லப்படும் மோரீஸ் வாழைப்பழம் தான் தற்போது வணிக ரீதியில் மிகவும் முன்நிறுத்தப்பட்டு எங்கெங்கும் காணினும் தென்படுகின்றன.
முன்நாளில் இது பெங்களூர் வாழை என அழைக்கப்பட்டது, முதலில் ரயில்நிலையங்களில் சென்னையில் அறிமுகமாகி, தற்போது அனைத்து பழக்கடைகளிலும், பழமுதிர்சோலைகளிலும், பெட்டிக் கடைகளிலும் இதன் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. பளபளப்பாகவும், கண்கவரும் மஞ்சள்நிறத்திலும், நீண்டநாள் கெடாமலும், பூச்சிகளால் தாக்கப்படாமலும் இருக்கும் வண்ணம் இவ் வாழைப்பழம் இருப்பதால் வியாபாரிகளின் விருப்பதிற்கான பழமாகி, அதுவே இன்று நுகர்வோரிடமும் திணிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு திசுவளர்ப்பு முறையில் சிறிய செடி தன்மையில் உருவாக்கப்படுவது.
விவசாயிகளுக்கு லாபமாகவும் இருக்கிறது. இது பூச்சியாலோ, நோயாலோ பாதிக்கப்படாத வாழை என்பதே இதன் சிறப்பாம்...! பூச்சி கூட விரும்பாத வாழை மனிதனுக்கு எதற்கு? இந்தப்பழம் குறித்து ஆரம்பத்தில் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.
இது மரபணுமாற்றுப்பழம், கரப்பான்பூச்சி, காட்டுப்பூச்சியின் ஜீன்களை கொண்டு உருவாக்கப்பட்ட மலட்டுப்பழம், இதை சாப்பிட்டால் ஆஸ்த்துமா, சைனஸ், வயிற்றுக்கோளாறு, தலைவலி ஏற்படும் என்றெல்லாம் பேசப்பட்டன.
இதற்கு திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மறுப்பு தெரிவித்தார். மற்றொருபுரம் இந்தப்பழம் காட்டுகொட்டை வாழையில் மீன், சோளம், காட்டுமொச்சையின் மரபணுக்கள் புகுத்தி உருவானது என்ற கருத்தும் சொல்லப்பட்டு வருகிறது. எப்படியான போதிலும் இது பாரம்பரிய வாழை ரகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
நமது பாரம்பரிய வாழைப்பழத்தின் சுவைக்கும், தரத்திற்கும் இது எந்தவிதத்திலும் ஈடாகாது என்பது மட்டுமல்ல, மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் உள்ளது.
இப்போதும் இந்த மோரீஸ் பழத்தை கோயில் வழிபாட்டிற்கோ, நோயாளிகளை பார்க்கச்செல்லும் போதோ கொண்டு செல்ல பலருக்கும் மனம் ஒப்புவதில்லை.
ஆனால், தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் பல கடைகளில் இந்தப்பழத்தை தவிர்த்து வேறுபழங்களே கிடைப்பதில்லை என்ற அளவுக்கு இந்த மோரீஸ் பழம் மட்டுமே முன்நிறுத்தப்படுகிறது. பலவகை பாரம்பரிய பயிர் கொண்ட பாரததேசத்தில் முன்பு புழுக்கத்தில் இருந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும், சிறு தானியங்களையும் காணாமலடித்துவிட்டு ஹைபிரிட் அரிசியை மட்டுமே நிலைநாட்டியதைப்போன்ற ஒரு முயற்சி இந்த மோரீஸ் வாழைபழ விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்க ஆதரவுடன் கார்பரேட் நிறுவனங்கள் களமிறங்கும் போது காணாமலடிக்கப்பட்ட சுதேசி குளிர்பானங்களின் கதை நாம் அறிந்தது தானே!
மோரீஸ் வாழைப்பழம் மட்டுமே தான் உண்ணக்கிடைக்கும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பது ,பயன்மிக்க பராம்பரிய வாழைரகங்களை கொண்ட ஒரு தேசத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதைப்போலவே கவலைதரத்தக்க இன்னொரு அம்சம் வாழை சாகுபடியில் பயன்படுத்தப்படும் அதீத ரசாயணங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும்!
வாழைக்கு யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், அமோனியம் சல்பேட், அமோனியம் பாஸ்பேட் போட்டால் தான் பலன்பார்க்க முடியும் என்பது நவீனவிஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மூடநம்பிக்கையாகும்.
வாழைசாகுபடிக்கு பஞ்சகாவ்யாவும், அமிர்த கரைசலும் அமோக பலன்களை அள்ளி வழங்குகிறது என்கிறார், மொடக்குறிச்சி காட்டுப்பாளையம் கிராமத்தின் இயற்கை விவசாயி ஆர்.பழனிச்சாமி! (8754035453)
வாழைப்பழத்தை விரைவில் பழுக்கச் செய்வதற்கு எத்திலீன், அசிட்டிலீன் என்ற ரசாயன வாயுக்கள் செலுத்தப்படுகிறது. மற்றும் சிலர் கார்பைடு கற்கள் வைத்து பழுக்கச்செய்கிறார்கள். இது சாப்பிடுபவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும். ஆனால், மிகப்பெரும்பாலோர் இந்த காரியத்தை சற்று குறைவாகவோ, அதிகமாகவோ செய்யத்தான் செய்கிறார்கள்! பன்நெடுங்காலமாக வாழைப்பழத்தை பழுக்கவைக்க வாழைத்தாளைக் கொண்டு மூடி கட்டிவைப்பதும், வைக்கோர் புதரில் வைப்பதுமே வழக்கமாக இருந்தது. இன்றும் இயற்கை விவசாயிகள் இதை பின்பற்றுகிறார்கள்.
விவசாயம் என்பது பணம் தரும் ஒரு தொழில் மாத்திரமன்று. அது பசியைத் தீர்க்கவும், உடலுக்கு பலத்தை தருவதற்குமான ஆதாரமாகும்! ஆனால், பசி தீர்ந்து பாதகங்கள் ஏற்படுமானால், அது பாவச்செயலாகி விடுமல்லவா? மேலும் ரசாயன உரங்கள், செயற்கை முறையில் பழுக்கவைத்தல் போன்றவற்றால் பழமே பலவீனப்பட்டு,நஞ்சாகி விடுகிறது. ஆனால் இயற்கை முறையிலான பழங்கள் ஒருவாரம் வைத்திருந்தாலும் தோல் கறுக்கலாமே தவிர , உட்புறம் அழுகாது.
பழம் வாங்குபவர்கள் எல்லாம் பளப்பாக இருக்கவேண்டும் என ஆசைப்படுவது பாமரத்தனமாகும். இதனால் வாழைப்பால் கரையைக்கூட சோடியம் கைபோக்னெட் கொண்டு சுத்தம் செய்கிறார்கள்.
முன்பெல்லாம் கிராமங்களில் பாம்பு கடித்துவிட்டால் சட்டென்று தோட்டத்திலுள்ள வாழையை ஓடித்து, வாழைத் தண்டின் சாறு கொடுத்து முதலுதவி செய்வார்கள்...! ஆனால், இப்போது அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஏனெனில், வாழைகுலை தள்ளியதும் அதன் தண்டில் தற்போது, மோனா குரோட்டோபாஸ்சை ஊசிமூலம் செலுத்துகிறார்கள். இது வாழைத் தண்டை நஞ்சாக்கிவிடும். வாழைத்தண்டுச் சாறு தான் இன்றளவும் சிறுநீரகக் கற்கள் கரைவதற்கான கண்கண்ட மருந்தாக பாவிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இதனை தவிர்க்க வேண்டும். இயற்கை விவசாயமுறையில் வாழைக்கன்றை நடுவதற்கு முன்பாக 15 நிமிடங்கள் பஞ்சகாவ்யா கரைசலில் முழ்கவைத்துவிட்டாலே போதுமானது. தண்டு அழுகல்நோய் கடைசி வரை தாக்காது என்பது அனுபவமாகும்.
நம்நாட்டில் முன்பு 3000 ரகமான வாழைகள் இருந்தன. அவற்றில் தற்போது மிகமிகக்குறைவான பாரம்பரிய ரகங்களே காலம் கடந்து நிற்கின்றன. அவற்றையாவது நாம் கண்டிப்பாக காப்பாற்றியாக வேண்டும்.
சாகுபடியாகும் பயிர்களில் வாழையைத்தான், 'வாழவைக்கும் வாழை' என்று சொல்வதுண்டு. அது சாகடிக்கும் வாழை என்றாகி விடக்கூடாது!
|