ஸ்ரீ ராமர் இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேசம். இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனிடம் வில், அம்பு இருக்காது. அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பது சிறப்பு. இலங்கையில் ராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார்.
ராமனைக்கண்ட ரிஷி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் எழுதிய ஓலைச் சுவடியை ராமனிடம் கொடுத்தார். அதை ராமர் பணிவுடன் பெற்றுக் கொண்டாராம். ஆனந்தத்தில் மிதந்தாராம்.தம்பியாகிய லட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தார். இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார்.
ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தை கேட்டு இன்புற்று, முக்திகோபணிஷத் என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. |